உதகை அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

உதகை: 5 நாட்களுக்கு பிறகு உதகை அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்டண சோதனைச்சாவடி அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்ததால் கடந்த 5 நாட்களாக காட்சி முனை மூடப்பட்டது. தொட்டபெட்டா மலைச்சிகரத்தை கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், தொட்டபெட்டா மலைச்சிகரத்துக்கு செல்லும் சாலையில் அமைக்கப்பட்டிருந்த பாஸ்டேக் நுழைவுக் கட்டண சோதனை சாவடியின் இருபுறமும் ஏற்பட்டு வந்த போக்குவரத்து பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பாஸ்டேக்கை வேறு இடத்துக்கு மாற்றி அமைக்கும் பணிகள் மற்றும் சோதனை சாவடியில் தரைக்கு கீழ் பகுதியில் கேபிள் ஒயா்கள் அமைக்கும் பணிகள், சாலையில் இண்டா்லாக் கற்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

இதன் காரணமாக கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி முதல் தொட்டபெட்டா மலைச்சிகரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்படுவதாக வனத் துறை தெரிவித்திருந்தது. தற்போது பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததால் 5 நாட்களுக்கு பிறகு உதகை அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

The post உதகை அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி! appeared first on Dinakaran.

Related Stories: