சென்னை திருவல்லிக்கேணி கோயில் அருகே முதியவரை மாடு முட்டிய விவகாரத்தில் மாநகராட்சிக்கு போலீஸ் கடிதம்..!!

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி கோயில் அருகே முதியவரை மாடு முட்டிய விவகாரத்தில் மாநகராட்சிக்கு போலீஸ் கடிதம் எழுதியுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே உள்ள மாதா கோயில் தெருவில் இன்று அதிகாலை 6:30 மணியளவில் முதியவர் ஒருவர் நடந்து சென்றார். அப்பகுதியில் 3க்கும் மேற்பட்ட மாடுகள் நின்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஒரு மாடு முதியவரை முட்டி தூக்கி வீசியது. இதில் பலத்த காயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தகவலின் பேரில் காயமடைந்த முதியவர் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்த முதியவர் யார்? மாட்டின் உரிமையாளர் யார்? என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது. சென்னையில் மாடுகள் சாலையில் சுற்றி திரிவாதை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. கூடுதல் அபராதம் விதித்தும் உரிமையாளர்கள் அச்சமின்றி மாடுகளை சாலையில் விடுகின்றனர். முதியவரை மாடு முட்டி தள்ளும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், முதியவரை மாடு முட்டிய விவகாரத்தில் மாநகராட்சிக்கு போலீஸ் கடிதம் எழுதியுள்ளது. மாநகராட்சி ஊழியர்களால் மாடு கையகப்படுத்தப்பட்ட நிலையில் கோயில் நிர்வாகத்துக்கு சொத்தமானது என தெரியவந்தது. மாட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்வது வழக்கம் என்ற நிலையில் யார் மீது வழக்கு பதிவது என குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. சென்னை மாநகராட்சியிடம் விளக்கம் கேட்டு சென்னை ஐஸ் அவுஸ் காவல் நிலைய போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.

The post சென்னை திருவல்லிக்கேணி கோயில் அருகே முதியவரை மாடு முட்டிய விவகாரத்தில் மாநகராட்சிக்கு போலீஸ் கடிதம்..!! appeared first on Dinakaran.

Related Stories: