திருப்பதி அருகே அதிகாலை மருந்தக தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து பயங்கர தீ

திருமலை: திருப்பதி அருகே மருந்தக தொழிற்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பாய்லர் வெடி விபத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்தார், 100க்கும் மேற்பட்டோர் தப்பினர். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ரேணிகுண்டா மண்டலத்தில் உள்ள மல்லாடி பகுதியில் தனியார் மருந்தக தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 3 ஷிப்டுகளாக 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இதேபோல் இன்று அதிகாலை 5 மணியளவில் பணி நடந்துெகாண்டிருந்தது. அப்போது அங்குள்ள ராட்சத பாய்லர் வெடித்து தீப்பிடித்தது.

இதைக்கண்ட தொழிலாளர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் திருப்பதி கஜூலாமண்டலத்தை சேர்ந்த சாய் கிஷோர் (27) என்பவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ரேணிகுண்டா தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் தீக்காயமடைந்த சாய் கிஷோரை மீட்டு திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்து காரணமாக தொழிற்சாலையில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாய்லர் வெடிப்புக்கான காரணம் குறித்து ரேணிகுண்டா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post திருப்பதி அருகே அதிகாலை மருந்தக தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து பயங்கர தீ appeared first on Dinakaran.

Related Stories: