தார்ப்பாய் போடாமல் செல்லும் மணல் லாரிகளால் விபத்து அபாயம்

*போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?

மானாமதுரை : மானாமதுரை நகருக்குள் செல்லும் கனிம லாரிகள் தார்ப்பாய் இல்லாமல் செல்வதால் பின்னால் வரும் வாகன ஓட்டிகளின் கண்களில் குறுமணல் தூசுகள் விழுந்து வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, விருதுநகர் பகுதியில் அரசு அனுமதி பெற்ற சவுடு மண், மணல், செம்மண், எம் சாண்ட் குவாரிகள் செயல்படுகிறது. இந்த குவாரியில் இருந்து தற்போது பல மாவட்டங்களுக்கு டிப்பர் லாரி மூலம் மணல் எடுத்துச் செல்லப்படுகிறது.

சவுடு மணல் ஏற்றி செல்லும் லாரிகள், தார்ப்பாய் மூடாமல் செல்வதால், அதிலிருந்து மணல் சரிந்து சாலையில் செல்லும், இருசக்கர வாகன ஓட்டிகளை, மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்குகிறது. மானாமதுரை சிவகங்கை நெடுஞ்சாலையில், 100க்கும் மேற்பட்ட சவுடு மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள் செல்கின்றன. இவை மணல் குவாரிகளில் இருந்து, சவுடு மணல் ஏற்றி கொண்டு செல்லும்போது, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை.

நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக சுமை ஏற்றி, மணலை குவித்து எடுத்து செல்கிறது. அவற்றின் மீது, தார்ப்பாய்கள் கொண்டு மூடப்படுவதில்லை. இதனால், லாரியில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் சவுடு மணல், சாலை மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது, வெளியில் சிதறுகிறது. அவை, லாரியின் பின்புறத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளின் முகம் மற்றும் கண்களில் விழுந்து சிரமத்திற்கு ஆளாக்குகிறது.

சில நேரங்களில் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி, விழுந்து, சிறு சிறு விபத்துகளை சந்திக்கின்றனர். அதிக சுமையுடனும், தார்ப்பாய் மூடாமல் செல்லும் லாரிகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து பெரியசாமி ராஜா கூறுகையில், மானாமதுரை வழியாக விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கும் மானாமதுரை வட்டாரத்தில் உள்ள செங்கல் குவாரிகள், வீடுகட்ட தேவையான ஆற்று மணல், செம்மண், எம்சாண்ட் மணல் எடுத்துச் செல்லப்படும் லாரிகள் மணல் மீது தார்ப்பாய் போடாமல் செல்வதால் மணல் வெளியே பறந்து செல்கிறது.

இதனால் லாரிக்கு பின்னால் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். சில சமயங்களில் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து போக்குவரத்து போலீசார், வருவாய்த் துறையினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post தார்ப்பாய் போடாமல் செல்லும் மணல் லாரிகளால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: