தமிழக கடன் பற்றி பேசுகிற அண்ணாமலை ஒன்றிய அரசின் ரூ.100 லட்சம் கோடி கடன் குறித்து பதில் சொல்வாரா? கே.எஸ்.அழகிரி கேள்வி

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் நிதிநிலை அதல பாதாளத்திற்கு சென்று விட்டதாகவும், தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் தொகை அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்து விடும் என்றும் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பேசியிருக்கிறார். இக்கருத்தை கூறுவதற்கு முன் ஒன்றிய பாஜ அரசின் கடன் நிலைமை என்ன என்பது குறித்து அவர் அறிந்திருக்க வேண்டும். ஒன்றிய பாஜ அரசின் மொத்த கடன் 2023 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி ரூ.153 லட்சம் கோடியாக இருந்தது. இது வரும் 2024 மார்ச் 31ல் ரூ.169 லட்சம் கோடியாக உயர்ந்துவிடும் என்று செய்தி வெளிவந்துள்ளது.

இதன்மூலம் ஒரே ஆண்டில் ரூ.16 லட்சம் கோடி கடன் உயர்ந்துவிடும் என்று கூறப்பட்டிருக்கிறது. நாடு விடுதலை பெற்ற பிறகு 67 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்த போது மொத்த கடன் ரூ.55 லட்சம் கோடி தான்.
உள்நாட்டுக் கடனும், வெளிநாட்டுக் கடனும் இந்தியாவை திவாலான நாடாக உலக அரங்கில் பறை சாற்றிய பெருமை மோடி அரசுக்குத் தான் உண்டு. தமிழகத்தின் கடனைப் பற்றி பேசுகிற அண்ணாமலை, ஒன்றிய பாஜ அரசின் 9 ஆண்டுகால கடன் சுமை ரூ.100 லட்சம் கோடி அதிகரித்திருப்பதைப் பற்றி என்ன பதில் கூறப் போகிறார்? இயற்கை பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற தமிழக மக்களின் துயரத்தில் எந்த பங்கையும் ஏற்க மறுக்கிற ஒன்றிய பாஜ அரசின் வஞ்சக, பாரபட்ச போக்கிற்கு தமிழ்நாட்டு மக்கள் உரிய பாடத்தை புகட்டுவார்கள்.

The post தமிழக கடன் பற்றி பேசுகிற அண்ணாமலை ஒன்றிய அரசின் ரூ.100 லட்சம் கோடி கடன் குறித்து பதில் சொல்வாரா? கே.எஸ்.அழகிரி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: