தமிழ்நாட்டுக்கு தினமும் 1 டிஎம்சி திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை: சித்தராமையா இன்று அவசர ஆலோசனை

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவின் 99வது கூட்டம் நேற்று அதன் தலைவர் நவீன் குப்தா தலைமையில் நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இதையடுத்து தமிழ்நாடு அரசு தரப்பில் கலந்து கொண்ட காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுவின் தமிழ்நாடு அரசின் உறுப்பினரும் நீர்வள ஆதாரத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளருமான எம்.சுப்பிரமணியம், டி.வி.சர்மா உறுப்பினர் கோபால் ராய் ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியதில், ‘‘கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரையில் காவிரியில் இருந்து 175 டி.எம்.சி தண்ணீர் திறக்க வேண்டும்.

ஆனால் 79 டி.எம்.சி தான் திறக்கப்பட்டுள்ளது. எனவே நிலுவை நீரான 97 டி.எம்.சி நிலுவை நீரை வழங்க கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும். குறிப்பாக மேட்டூர் நீர் மட்டம் குறைந்துள்ளதால் உடனடியாக 40 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு பதலளித்த கர்நாடகா அரசு அதிகாரிகள், மாநிலத்தில் தற்போது தான் மழை பெய்து வருகிறது. அதனை அடிப்படையாக கொண்டு தான் நீர் திறக்க முடியும் என்று தெரிவித்தனர். இதேப்போன்று புதுவை மற்றும் கேரளா அரசு தரப்பிலும் பல்வேறு முக்கிய கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து அனைத்து தரப்பு கோரிக்கைகளையும் கேட்ட ஒழுங்காற்று குழுவின் தலைவர் நவீன் குப்தா,‘‘தமிழ்நாட்டுக்கு இம்மாதம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி வீதம் திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்தார். தமிழ்நாட்டிற்கு தினமும் ஒரு டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டதன் எதிரொலியாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, டி.கே. சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்.

The post தமிழ்நாட்டுக்கு தினமும் 1 டிஎம்சி திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை: சித்தராமையா இன்று அவசர ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: