சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், மூத்த அரசியல் தலைவருமான சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:

* எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்): இந்திய அரசியல் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்ற சீதாராம் யெச்சூரி மறைவு நாட்டிற்கும், தொழிலாளர் வர்க்கத்திற்கும் பேரிழப்பாகும்.

* செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): தேசிய அளவில் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கவும், வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தவும் பெரும் துணையாக இருந்தவர் சீதாராம் யெச்சூரி.

* கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): ஐக்கிய முன்னணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கங்களை உருவாக்கும் முயற்சியில் முக்கிய பங்களிப்பு செய்தவர் சீதாராம் யெச்சூரி. அவரது இழப்பு இந்தியாவின் ஜனநாயக பன்மைத்துவத்தை பாதுகாப்பதற்கான போராட்டத்திற்கு பேரிழப்பாகும்.

* முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): மாநிலங்களவை உரையில் நவ தாராளமய கொள்கைகளின் சீரழிவையும், வகுப்புவாத சக்திகளால் ஏற்பட்டுள்ள பேராபத்து நிகழ்வுகளையும் நாட்டின் கவனத்துக்கு எடுத்துக் கூறியவர் சீதாராம் யெச்சூரி.

* வைகோ (மதிமுக): இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டு, ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு, மிசா கொடுமைகள் அரங்கேற்றம் செய்யப்பட்டபோது அதனை எதிர்த்து மாணவர் சக்தியை திரட்டிப் போராடியவர் சீதாராம் யெச்சூரி.

இதேபோன்று ராமதாஸ் (பாமக), திருமாவளவன் (விசிக தலைவர்), ஜி.கே.வாசன் (தமாகா), பிரேமலதா (தேமுதிக), அன்புமணி (பாமக தலைவர்), அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

The post சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: