வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி மனு: அமலாக்கத்துறை பதில் அளிக்க அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் 2023 ஜூன் 14ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக அவரை கடந்த 16ம் தேதி ஆஜர்படுத்தும்படி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் என்.பரணிகுமார் அமர்வு நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்தார். இதனால் குற்றச்சாட்டு பதிவு செய்யும் நடைமுறை மேற்கொள்ளப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.

செந்தில்பாலாஜி மனுவில், தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரமில்லை. விடுவிக்க கோரிய மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை குற்றச்சாட்டுகள் பதிவை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை மார்ச் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இதனிடையே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்ததால் அவர் புழல் சிறையல் இருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, அவரது காவலை மார்ச் 4ம் தேதிவரை நீட்டித்து நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.

The post வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி மனு: அமலாக்கத்துறை பதில் அளிக்க அமர்வு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: