ரேலா மருத்துவமனை சார்பில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிளத்தான்: 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தாம்பரம்: குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை, சென்னை சைக்ளிஸ்ட்ஸ் அமைப்பு சார்பில், பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிளத்தான் நிகழ்ச்சி நேற்று நடந்தது. 125 கி.மீ. தூரத்திற்கான ‘ப்ரீடம் 125’ மற்றும் 40 கி.மீ. தூரத்திற்கான ‘விடுதலை 40’ சைக்கிளத்தான் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்சியில், 16 வயது முதல் 70 வயதுடைய 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ரேலா மருத்துவமனை நுழைவாயிலில் இருந்து, அதிகாலை 5.30 மணிக்கு இந்த சைக்ளத்தான் தொடங்கியது. ரேலா மருத்துவமனை தலைமை செயல் அலுவலர் இளங்குமரன் கலியமூர்த்தி, சர்வதேச சைக்ளிஸ்ட்ஸ் எம்.ஆர்.சவுந்தரராஜன், மைண்ட் அண்ட் மாம் தலைமை செயல் அலுவலரும், இணை நிறுவனருமான பத்மினி ஜானகி, ரேலா மருத்துவமனை இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி பிரிவு தலைவர் தீபஸ்ரீ ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த சைக்ளத்தான், ஜிஎஸ்டி சாலை வழியாக திருப்போரூர், செங்கல்பட்டு, பாலூர், ஒரகடம், படப்பை, முடிச்சூர் வழியாக, மீண்டும் ரேலா மருத்துவனை வளாகத்தில் நிறைவு பெற்றது. பணத்தை நிறைவு செய்தவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரேலா மருத்துவமனை தலைமை செயல் அலுவலர் இளங்குமரன் கலியமூர்த்தி பேசுகையில், ‘‘நமது நாட்டின் சில பகுதிகளில் பெண்களுக்கு எதிரான கண்டிக்கத்தக்க வன்முறை செல்களால் பெண்களின் பாதுகாப்பு என்ற கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்தோம்.

வீட்டிலும், பணியாற்றும் இடத்திலும், சாலைகளிலும் மற்றும் சமுதாயம் முழுவதிலும் பெண்கள் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் ஏற்படுத்தி உள்ளது. பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், நமது நாட்டின் வளர்ச்சி மற்றும் செழுமைக்கு பெண்கள் முழுமையாக பங்களிக்க வழி வகுக்கிறோம்,’’ என்றார்.

The post ரேலா மருத்துவமனை சார்பில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிளத்தான்: 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: