வடசென்னை பகுதியில் தனியாக சென்ற நூற்றுக்கணக்கான பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராஜஸ்தான் ஆசாமி: ஹெல்மெட், மாஸ்க் அணிந்து தப்பியவரை பொறி வைத்து மடக்கி பிடித்தது போலீஸ்

சென்னை: வடசென்னை பகுதியில் கடந்த சில மாதங்களாக தனியாக செல்லும் சிறுமிகள், இளம்பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த ராஜஸ்தான் ஆசாமியை போலீசார் பொறி வைத்து மடக்கினர். விசாரணையில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது. வியாசர்பாடி, எம்கேபி நகர், கொடுங்கையூர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்ம நபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் மற்றும் மாஸ்க் அணிந்து வந்து சிறுமிகள், இளம்பெண்களை குறி வைத்து அவர்களின் முன் பகுதி மற்றும் பின் பகுதிகளை சீண்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு விட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து, எம்.கே.பி நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் அவ்வப்போது, காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் புகார்கள் வந்தன. ஆனாலும் பெண்கள் தைரியமாக புகார் கொடுக்க முன்வருவதில்லை என்ற தகவலும் போலீசாருக்கு கிடைத்தது. எனவே, இதுகுறித்து விசாரணை நடத்த எம்.கே.பி. நகர் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு எம்.கே.பி. நகர் மத்திய குறுக்கு தெரு பகுதியில் நடந்து சென்ற 35 வயது மதிக்கத்தக்க ஐடி பெண் ஊழியரை இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் திடீரென வழிமறித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக எம்.கே.பி. நகர் போலீசாருக்கு புகார் வந்தது.

மேலும், சில தினங்களுக்கு முன்பு எம்.கே.பி. நகர் பகுதியை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஒருவரும், இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார் அளித்திருந்தார். இப்படி பல பேர் பாதிக்கப்பட்டாலும் இந்த இரண்டு புகார்கள் மட்டுமே வந்ததால் எம்.கே.பி. நகர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து, புகார் வந்த இடத்தில் உள்ள சுமார் நூறு சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், இருசக்கர வாகனத்தில் வரும் நபர் ஹெல்மெட் அணிந்து, மாஸ்க் போட்wதனியாக நடந்து செல்லும் சிறுமிகள் மற்றும் இளம்பெண்ணை வழிமறித்து அவர்களது முன், பின் பக்கம் கையால் சீண்டிவிட்டு செல்வதும், அவர்கள் பயந்து போய் சாலையில் அமரும்போது அவர்கள் அழுவதை ரசித்து விட்டு செல்வதும் சிசிடிவி கேமரா காட்சிகளில் பதிவானதை போலீசார் கண்டறிந்தனர்.

இதையடுத்து, அவரது இரு சக்கர வாகனத்தை ஆய்வு செய்தபோது, இரவு நேரங்களில் அவர் வருவதால் சரியாக வாகனத்தின் பதிவு எண்ணை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர். இந்நிலையில், அவரது இருசக்கர வாகன எண்ணின் கடைசி எண் 7 என்பது போலீசாருக்கு தெளிவாக தெரிந்தது. அது கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வாங்கப்பட்ட புதிய இருசக்கர வாகனம் என்பதும் போலீசாருக்கு தெரிய வந்தது. குறிப்பிட்ட வண்டி மாடலில் எத்தனை வண்டிகள் வெளிவந்துள்ளன. அதில், எத்தனை வண்டிகளின் எண்கள் 7 என முடிகின்றன என்பதை போலீசார் ஆராய்ந்தனர்.

அப்போது அவர்களுக்கு வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை பகுதியில் குடியிருக்கும் பிரகாஷ் (43) என்பவர் குறிப்பிட்ட ஒரு இருசக்கர வாகனத்தை வாங்கியதும், அவரது வண்டி எண் 7 என முடிவதையும் கண்டறிந்தனர். இதனையடுத்து போலீசார் தொடர்ந்து அவரை ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது அவர் அண்ணா சாலை ரிச்சி தெருவில் மொபைல் சர்வீஸ் சென்டரில் வேலை செய்து வருவதும், வேலை முடிந்து இரவு வீட்டிற்கு வரும்போது, எம்.கே.பி. நகர், வியாசர்பாடி, கொடுங்கையூர் போன்ற இடங்களில் தனியாக நடந்து செல்லும் சிறுமிகள், இளம்பெண்களின் பின்பகுதி மற்றும் முன்பகுதியை சீண்டி அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் சென்று விடுவதையும் அறிந்தனர்.

அந்த வகையில், பிரகாஷ் இதுவரை நூற்றுக்கணக்கான பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இந்நிலையில், நேற்று காலை எம்.கே.பி. நகர் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், எஸ்ஐ சசிகுமார் தலைமையிலான போலீசார் அவரை வீட்டில் கைது செய்தனர். பின்னர், காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். அதில், அவரது பூர்வீகம் ராஜஸ்தான் என்பதும், இவருக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. கிரண் என்ற மனைவி உள்ளார். குழந்தைகள் இல்லை என்பது தெரிந்தது. இதனையடுத்து, பிரகாஷ் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

* புகார் அளிக்க முன்வராத பெண்கள்
போலீசார் பிரகாஷிடம் தொடர்ந்து விசாரணை செய்ததில், பிரகாஷுக்கு எப்போதெல்லாம் பெண்களை தொட வேண்டும் என்ற எண்ணம் வருகிறதோ, அப்போது வேலை முடிந்து வரும்போது, வியாசர்பாடி, எம்.கே.பி. நகர் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் சாலையில் தனியாக நடந்து செல்லும் சிறுமிகள, இளம்பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. கடந்த இரண்டு மாதங்களில் பல பெண்களிடம் இவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாலும் எந்த பெண்களும் புகார் கொடுக்க வரவில்லை. கடைசியாக ஐடி பெண் ஊழியர் மற்றும் சட்டக் கல்லூரி மாணவி ஆகிய இருவர் மட்டுமே புகார் கொடுத்ததும் தெரிய வந்தது.

The post வடசென்னை பகுதியில் தனியாக சென்ற நூற்றுக்கணக்கான பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராஜஸ்தான் ஆசாமி: ஹெல்மெட், மாஸ்க் அணிந்து தப்பியவரை பொறி வைத்து மடக்கி பிடித்தது போலீஸ் appeared first on Dinakaran.

Related Stories: