பெரம்பூர், வியாசர்பாடியில் வழிப்பறி செய்த 3 பேர் கைது

பெரம்பூர்: பெரம்பூர், வியாசர்பாடியில் பணப்பறிப்பில் ஈடுபட்ட 3 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். சென்னை திருவிக நகர் கென்னடி ஸ்கொயர் பகுதியில் வசிப்பவர் மணிகண்டன் (28). இவர் வீனஸ் பேருந்து நிலையம் அருகே பழைய இரும்புக் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த அகரம் பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்த கதிர் என்ற கதிரவன் (28) என்ற நபர் மணிகண்டனிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

மணிகண்டன் பணம் தர மறுக்கவே, அவரை அடித்துவிட்டு கடையில் இருந்த ஆயிரம் ரூபாயை எடுத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து மணிகண்டன் செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி தலைமையிலான போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தியதில் சரித்திரப் பதிவேடு ரவுடியான கதிரவன் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர் மீது ஏற்கனவே 16 குற்ற வழக்குகள் உள்ளன. கதிரவனை கைது செய்த போலீசார் அவர்மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோல் சென்னை வியாசர்பாடி மூர்த்திங்கர் நகர் ஹவுசிங் போர்டு பகுதியில் 2 பேர் குடிபோதையில் கத்தியைக் காட்டி பொதுமக்களை மிரட்டி பணப் பறிப்பில் ஈடுபடுவதாக எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதிக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் மதியம் அங்கு சென்ற போலீசார் 2 பேரையும் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் வியாசர்பாடி சஞ்சய் நகரைச் சேர்ந்த மதன்குமார் (19) மற்றும் வியாசர்பாடி மூர்த்திங்கர் நகர், ஹவுசிங் போர்டைச் சேர்ந்த தயால்ராஜ் (24) என்பது தெரிய வந்தது. இருவர் மீதும் ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பெரம்பூர், வியாசர்பாடியில் வழிப்பறி செய்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: