சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் பாதிரியார் கைது

சென்னை: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியாரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரம் வெங்கடேச பாளையம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, 10ம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த ஜனவரி மாதம் சிறுமியின் தந்தை, காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள சிஎஸ்ஐ சர்ச்சில் தங்கி, தோட்ட வேலை செய்துள்ளார். அப்போது, சிறுமியும் உடன் தங்கியுள்ளார்.

அப்போது, சிறுமிக்கு சர்ச் பாதிரியார் தேவ இரக்கம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி தந்தையிடம் கூறியுள்ளார். அதன்பேரில், வெங்கடேச பாளையம் பொதுமக்கள், இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளனர். முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரிகள், இதுகுறித்து முறையான விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுத்திட காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு உத்தரவிட்டனர்.

அதன்படி, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சக்தி காவியா, விசாரணை மேற்கொண்டு காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், சிஎஸ்ஐ சர்ச் பாதிரியார் தேவ இரக்கம் (54) மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் பாதிரியார் கைது appeared first on Dinakaran.

Related Stories: