10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்கும் அதிகாரிகள் நியமனம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை கண்காணிக்கும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுகளுக்கு ஒவ்வொரு வருவாய் மாவட்டங்களுக்கும் கண்காணிக்கும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரையிலும், 11ம் வகுப்பிற்கு மார்ச் 4ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலும், 10ம் வகுப்பிற்கு மார்ச் 26ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.

மேலும், 12ம் வகுப்பிற்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 12ம் தேதி முதல் 17ம் தேதி வரையிலும், 11ம் வகுப்பிற்கு பிப்ரவரி 19ம் தேதி முதல் 24ம் தேதி வரையிலும், 10ம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு பிப்ரவரி 23ம் தேதி முதல் 29ம் தேதி வரையில் நடத்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு, அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் பொதுத்தேர்வுகளுக்கு மாணவ-மாணவிகள் தங்களை தயார்ப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பொதுத்தேர்வுகளை கண்காணிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கல்வித்துறையின் அரசு தேர்வுத்துறை சார்பில் அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் பொதுத்தேர்வு பணிகளைக் கண்காணிப்பதற்கு மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித் துறையில் மாநில அளவில் பணியாற்றும் இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்களை நியமனம் செய்து, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.

இதில் சென்னை மாவட்டத்துக்கு ஆசிரியர் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஸ்ரீவெங்கடபிரியாவும், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தியும், காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் உமாவும், வேலூர் மாவட்டத்துக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணப்பனும், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி திருவள்ளுர் மாவட்டத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனர் பழனிசாமியும், மதுரை மாவட்டத்துக்கு தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜமுருகனும், ஈரோடு மாவட்டத்திற்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் கெஜலட்சுமி, சேலம் மாவட்டத்திற்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் செயலாளர் குப்புசாமி, கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் மாநில திட்ட இயக்குனர் உமா உள்பட 38 மாவட்டங்களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுத்தேர்வுகள் தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து நாளை திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்கும் அதிகாரிகள் நியமனம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: