7 மாத கருவை கலைக்க மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி பரிதாப பலி: ஜெயங்கொண்டம் அருகே சோகம்

ஜெயங்கொண்டம்: 7மாத கருவை கலைக்க மாத்திரை தின்ற கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் அரியலூர் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கிராமம் கரைமேட்டு பகுதியை சேர்ந்தவர் வீரமணி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரமணா (23). இவர்களுக்கு கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தாரணி (4) என்ற மகளும், ஹரிபிரசாத் (2) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் 3வது முறையாக ரமணா கர்ப்பமடைந்தார்.

7 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கர்ப்பத்தை கலைக்க முடிவு செய்த ரமணா, தனியார் மருந்து கடையில் மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 30ம் தேதி ரமணாவுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனையடுத்து உறவினர்கள் ரமணாவை அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதிகமான மாத்திரைகள் சாப்பிட்டதால் அவரது வயிற்றில் குழந்தை இறந்த நிலையில் தெரிய வந்ததால் சிசுவை ஆப்ரேசன் மூலமாக டாக்டர்கள் அகற்றினர்.

இதற்கிடையே ரமணாவின் உடல்நிலை மோசமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு ரமணா உயிரிழந்தார். இது குறித்து ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராமராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ரமணாவுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆனதால் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்.

The post 7 மாத கருவை கலைக்க மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி பரிதாப பலி: ஜெயங்கொண்டம் அருகே சோகம் appeared first on Dinakaran.

Related Stories: