பிரதமர் மோடி இன்று சிறப்பு வழிபாடு ஸ்ரீரங்கம், ராமேஸ்வரத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, தனுஷ்கோடி செல்ல அனுமதியில்லை

சென்னை: பிரதமர் மோடி இன்று சிறப்பு வழிபாடு செய்வதையொட்டி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரத்தில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு மூன்று நாள் பயணமாக நேற்று மாலை சென்னை வந்த பிரதமர் மோடி, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். பின்னர், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்றிரவு தங்கினார். இன்று காலை விமானம் மூலம் திருச்சி செல்லும் பிரதமர் மோடி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து உழவாரப்பணி செய்கிறார். இதையொட்டி, திருச்சி விமான நிலையம் முதல் ஸ்ரீரங்கம் கோயில் பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் பஞ்க்கரைக்கு ஹெலிகாப்டரில் மோடி வருகிறார்.

இந்த பகுதி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளதால் அந்த சாலையை பயன்படுத்த கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் கோயிலில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று மதியம் 2.30 மணி வரை பக்தர்கள் பொது தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனத்தை முடித்துவிட்டு, மதுரைக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரத்துக்கு பிற்பகல் 2 மணிக்கு பிரதமர் மோடி செல்கிறார். இதனால் இன்று நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை ராமநாதபுரம் – ராமேஸ்வரம் இடையே போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. நண்பகல் 12 மணி முதல் நாளை 12 மணி வரை அரிச்சல்முனை பகுதியில் உள்ள கோதண்ட ராமர் கோயிலுக்கும் பிரதமர் மோடி செல்வதால் தனுஷ்கோடிக்கு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி இல்லை. இன்றும், நாளையும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் வருகையையொட்டி திருச்சி, ராமேஸ்வரத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 6500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலோரங்களில் கப்பல் மற்றும் ஹெலிகாப்டரில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

The post பிரதமர் மோடி இன்று சிறப்பு வழிபாடு ஸ்ரீரங்கம், ராமேஸ்வரத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, தனுஷ்கோடி செல்ல அனுமதியில்லை appeared first on Dinakaran.

Related Stories: