பெரியாறு அணை குறித்து விஷமத்தனமான பேச்சு: கேரளத்துக்கு மட்டும் சுரேஷ்கோபி அமைச்சரா?: செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒன்றிய பாஜ அமைச்சர் சுரேஷ்கோபி, ‘முல்லைப் பெரியாறு அணை தற்போது பாதுகாப்பானதாக இல்லை. எனவே, இந்த அணைக்கு பதிலாக அருகில் புதிய அணை கட்ட வேண்டும். முல்லைப் பெரியாறு அணை இடிந்தால் யார் பொறுப்பு? நீதிமன்றம் பதில் சொல்லுமா அல்லது நீதிமன்றங்களில் இருந்து அத்தகைய முடிவுகளை பெறுபவர்கள் பொறுப்பேற்பார்களா, இனியும் கேரளாவால் கண்ணீரில் மூழ்கியிருக்க முடியாது’ என்ற வகையில் பேசி இடுக்கி மாவட்ட மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ்நாட்டின் உரிமைக்கு பாதுகாப்பாக இருக்கும் போது கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒன்றிய பாஜ அமைச்சர் தமிழ்நாட்டின் நலன்களுக்கு விரோதமாக இத்தகைய கருத்துகளை கூறுவதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி கேரள மாநிலத்திற்கு மட்டும் அமைச்சரா அல்லது இந்தியா முழுமைக்குமான அமைச்சரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

ஏற்கனவே காவிரி பிரச்னையில் அண்டை மாநிலமான கர்நாடகத்தோடு உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிற நேரத்தில் இன்னொரு அண்டை மாநிலமான கேரள மாநிலத்துடன் போராடுகிற நிலைக்கு ஒன்றிய அமைச்சர் சுரேஷ்கோபி தள்ளியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பெரியாறு அணை குறித்து விஷமத்தனமான பேச்சு: கேரளத்துக்கு மட்டும் சுரேஷ்கோபி அமைச்சரா?: செல்வப்பெருந்தகை கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: