பெரியபாளையம் ராள்ளாபாடி ஸ்ரீ சீரடி சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் 108 பால்குடம் எடுத்து வழிபாடு

பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே ராள்ளாபாடி சீரடி சாய்பாபா திருக்கோயில் ஐந்தாம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு 108 பால்குடம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே ராள்ளாபாடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோயில் கும்பாபிஷேக நாளான ஐந்தாம் ஆண்டு வருடாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

நிகழ்ச்சியை முன்னிட்டு, அதிகாலை புனித நீராடி 108 பக்தர்கள் காப்பு கட்டி, விரதம் இருந்து அஞ்சாத்தம்மன் கோயிலில் இருந்து மேல தாளங்கள் முழங்க, தலையில் பால்குடம் சுமந்து சுமார் 1 கி.மீ தூரம் ஊர்வலமாகச் சென்று கோயில் வரை பாதயாத்திரை வந்து கோயிலில் உள்ள சீரடி சாய்பாபாவிற்கு பக்தர்கள் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.

இதனைத் தொடர்ந்து 8 மணியளவில் கணபதி ஹோமம், தன்வந்திரி சுதர்சன ஹோமம், தீர்க்க ஆயுள் வேண்டி ஆயுஷ் ஹோமம், பாபா மூல மந்திர ஹோமம், குரு, சனிப்பெயர்ச்சி அடைந்ததை ஒட்டி நவகிரக சாந்தி பரிகார ஹோமம், உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து பாபாவிற்கு பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீப, தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது. கோயிலுக்கு வந்திருந்த ஏராளமான பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சிவா சாய்சேவா அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

The post பெரியபாளையம் ராள்ளாபாடி ஸ்ரீ சீரடி சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் 108 பால்குடம் எடுத்து வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: