ஊட்டிக்கு சென்ற பஸ்சில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை: மாஜி ராணுவ வீரர் கைது

குன்னூர்: கோவையில் இருந்து ஊட்டிக்கு நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. அதில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, அஜ்ஜூரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் தர்மன் பயணம் செய்தார். இவரது இருக்கை அருகே நீலகிரியை சேர்ந்த 28 வயது பெண் போலீஸ் வேலை சம்பந்தமாக கோவைக்கு வந்துவிட்டு சீருடையில் திரும்பி கொண்டிருந்தார். பஸ் மலைப்பாதையில் சென்றபோது பெண் போலீசுக்கு தர்மன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அவர் தட்டிக்கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. கண்டக்டர் மற்றும் சக பயணிகள் சமாதானம் செய்தனர். ஆனால் குடிபோதையில் இருந்த தர்மன், பெண் போலீசை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார். இதில் அவரது காதில் காயம் ஏற்பட்டது. நள்ளிரவில் பஸ் குன்னூர் வந்ததும் பெண் போலீஸ், குன்னூர் போலீசாருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து, பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, தாக்கிய மாஜி ராணுவ வீரர் தர்மன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். காயமடைந்த பெண் போலீஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

The post ஊட்டிக்கு சென்ற பஸ்சில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை: மாஜி ராணுவ வீரர் கைது appeared first on Dinakaran.

Related Stories: