கஞ்சா கடத்தி வந்த ஒடிசா வாலிபர் கைது

சென்னை: கஞ்சா பார்சல்களுடன் வாலிபர் ஒருவர், கோயம்பேடு பேருந்து நிலையம் வருவதாக அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் மனோகர் தலைமையில் போலீசார் மாறுவேடத்தில் கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு மார்க்கெட் ஆகிய பகுதிகளில் கண்காணித்து கொண்டிருந்தனர். அப்போது, கோயம்பேடு ஜெய் பார்க் அருகே பார்சல்களுடன் சந்தேகத்திற்கிடமாக சென்ற வடமாநில வாலிபர் ஒருவர், போலீசாரை கண்டதும் பார்சல்களை கீழே போட்டுவிட்டு தப்பிச் செல்ல முயன்றார்.

போலீசார் விரட்டி சென்று அவரை மடக்கி பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், அவர் ஒடிசாவை சேர்ந்த பயாஸ் (23) என்பதும், கோயம்பத்தூர் மாவட்டத்தில் கூலி வேலை செய்து வருவதும், அதில் போதிய வருமானம் இல்லாததால் ஒடிசாவில் இருந்து தினமும் கஞ்சா கடத்தி வந்து கோயம்பேடு பேருந்து நிலையம் வழியாக கோயம்பத்தூர் மாவட்டம் சென்று அங்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post கஞ்சா கடத்தி வந்த ஒடிசா வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: