உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிக அளவு விவசாயம் செய்யும் பணிகள் மட்டுமே நடைபெற்று வந்தது. சுதந்திரத்திற்கு முன்னும், பின்னும் என எடுத்துக்கொண்டால் இதுவரையில் சொல்லிக்கொள்ளும் படியான பெரிய தொழிற்சாலைகள் கூட இதுவரையில் இல்லை. தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியாக மட்டுமே உளுந்தூர்பேட்டை இருந்து வந்துள்ளது. ஆனால் உளுந்தூர்பேட்டைக்கு பெறுமையாக கூறிக்கொள்ளும் வகையில் பாடல் பெற்ற தலங்கள் மட்டுமே அதிக அளவு உள்ளது.
ஆனால் சுதந்திரத்திற்கு முன்னர் அதாவது சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் உளுந்தூர்பேட்டை அருகே நகர் பகுதியில் விமானப்படை ஓடுதளம் அமைத்து இரண்டாம் உலகப் போரில் முக்கியத்துவம் வாய்ந்த போர் விமான படைத் தளமாக விளங்கியது. இன்று இந்த விமான ஓடுதளம் விவசாய பயிர்கள் காய வைக்கும் உலர் களமாக மாறியுள்ளது. நகர் கிராமத்தில் விமான ஒடுதளம் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் நாஜி படைகளுக்கும் நேசநாட்டுப் படைகளுக்கும் இடையே கடும் போர் நடந்தது.
இதில் நேசநாட்டுப்படைகளின் போர் விமானங்கள் இறங்கி செல்லவும், ஆயுதங்களை பாதுகாப்பாக வைக்கவும் இந்த நகர் விமானதளம் அமைக்கப்பட்டது. போர் முடிந்து அடுத்த ஒரு சில ஆண்டுகளில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. அதன்பிறகு முக்கிய விமானங்கள் இந்த நகர் பகுதியில் இறங்கி செல்வதற்கு வசதியாக ஓடு தளம் அமைக்கப்பட்டது. 1955ம் ஆண்டு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு அடிக்கல் நாட்டுவிழாவிற்கு அப்போதைய பிரதமர் ஜவகர்லால்நேரு இந்த நகர் விமானதளத்தில் விமானத்தில் வந்து இறங்கி இங்கிருந்து கார் மூலம் நெய்வேலிக்கு சென்றார்.
அதன்பிறகு இதுவரையில் சுமார் 70 ஆண்டுகாலத்திற்கும் மேலாக இந்த விமான ஓடுதளம் எந்தவித பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படவில்லை. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் நெல், கோதுமை உள்ளிட்ட தானியங்களை வைத்து பாதுகாக்கும் கிடங்காக பயன்படுத்தி வந்தனர். விமான ஓடுதளம் போடப்பட்டு இத்தனை வருடத்திற்கும் மேலாகியும் அதிக அளவு சேதம் அடையாமல் வரலாற்று சுவடாகவே உள்ளது. தற்போதும் புதியதாக கார் உள்ளிட்ட வாகனங்களை வாங்குபவர்கள் இந்த விமான ஓடுதளத்திலேயே வாகனங்களை ஓட்டி கற்றுக்கொள்கின்றனர்.
இந்த விமான ஓடுதளம் நகர், செங்குறிச்சி, மதியனூர், பு.மாம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை எல்லைக்கு உட்பட்ட சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அதிக அளவு ஆக்கிரமிப்புகள் உள்ளதால் விமான ஓடுதளம் சுமார் 150 ஏக்கரில் சுருங்கியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த விமான ஓடுதளத்தில் விமான பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் பல ஆண்டுகாலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதற்காக கோவை மற்றும் புதுச்சேரியில் இருந்து வந்த தனியார் விமான பயிற்சி நிர்வாகிகள் ஆய்வு செய்ததோடு சரி இதுவரையில் இதற்காக எந்த அதிகாரியும் இதுவரையில் முயற்சி செய்யப்படவில்லை. இந்த வரலாற்று பெருமைமிக்க உளுந்தூர்பேட்டை நகர் விமான ஓடுதளம் இன்று பாழடைந்து விவசாய உலர்களமாக மாறியுள்ளது. பழமை மாறாமல் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அறிவிப்போடு சரி...
இதுகுறித்து உளுந்தூர்பேட்டையை சேர்ந்த அம்பேத்கர் என்பவர் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தல்கள் வரும் போது மட்டும் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் இடமாக நகர் விமான ஓடுதளம் உள்ளது. ஒவ்வொரு முறையும் விமான ஓடுதளத்தில் சிறு விமான பயிற்சி மையம் அமைய போவதாகவும், மத்திய அரசின் கிடங்குகள் மற்றும் விமான சரக்கு பொருட்கள் வைக்கும் இடமாகவும் வரப்போவதாக அவ்வப்போது எம்பிகளும், அதிகாரிகளும் ஆய்வு செய்வதோடு சரி இதுவரையில் எந்த திட்டமும் இந்த இடத்தில் செயல்படுத்தப்பட வில்லை.
ஆக்கிரமிப்பு செய்பவர்களிடம் இருந்து மீதமுள்ள இடத்தை பாதுகாப்பதற்காக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேர்தல் அறிக்கையில் கூறுவதோடு மட்டும் அல்லாமல் விமான ஓடுதளத்தில் அரசு பயன்பாட்டிற்கு கொண்டு வந்து படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் என கூறினார்.
