×

வரலாற்று சிறப்புமிக்க திருப்பத்தூர் மாவட்டம் கீழடிபோல் திருப்பத்தூரிலும் ஆராய்ச்சி மேற்கொண்டால் மற்றொரு கீழடி கண்டெடுக்க வாய்ப்பு

* தமிழக அரசுக்கு தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை
* அரிய உண்மைகள் வெளிப்படும் என்று எதிர்பார்ப்பு

திருப்பத்தூர்: வரலாற்றுத் தடயங்களால் திருப்பம் பெரும் திருப்பத்தூர் நீண்ட நெடிய வரலாற்றுச் சிறப்பு மிக்க திருப்பத்தூரானது. ஆதியூர் முதல் கோடியூர் வரை 8 திசைகளில் 10 திருத்தலங்கள் அமைந்திருப்பதால் “திருப்பத்தூர்” என்ற பெயர் வந்தது என்றும், திருப்பத்தூரைப் பல்வேறு காலகட்டங்களில் பல மன்னர்கள் ஆண்ட அக்காலத்தில் பிரம்மபுரம், திருப்பேரூர், திருவனபுரம் எனப் பல பெயர்களில் திருப்பத்தூர் அழைக்கப்பட்டது. கி.பி. 14ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் திருவனபுரம் என்ற பெயரைத் திருப்பத்தூர் என்று மாற்றி உள்ளதாகவும் மக்களால் கூறப்படுகிறது. இத்திருப்பத்தூரானது சங்ககாலத்தில் நன்னன்சேய் நன்னன் ஆட்சி செய்த நவிரமலை என்று கருதப்படும். ஜவ்வாது மலை மற்றும் அதன் நீட்சியான ஏலகிரி மலை ஆகிய 2 பெரிய மலைகளால் சூழப்பட்ட பகுதி ஆகும். ஜவ்வாது மலை, இயற்கை எழில் கொஞ்சும் அருவிகள், நீரோடைகள், காடுகள் என்று காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் மலையாகும். ஜவ்வாது மலையில் இருந்து செய்யாறு, ஆரணியாறு, கமண்டல நாகநதி ஆறு, மிருகண்டா நதி ஆகிய ஆறுகள் உற்பத்தியாகின்றன. இம்மலை மிகச் சிறந்த சந்தன மரங்கள் விளையும் பூமியாகத் திகழ்ந்தது. இதனால் ஆசியாவிலேயே 2வது பெரிய சந்தனக் கிடங்கு திருப்பத்தூரில் அமைக்கப்பட்டது. சந்தனம் விளையும் ஜவ்வாது மலையை ஒட்டி அமைந்துள்ளதாலும், பெரிய சந்தனக் கிடங்கு உள்ளதாலும் திருப்பத்தூரை ”சந்தன மாநகர்” எனவும் அழைக்கப்படுவது உண்டு.

இவ்வாறான நிலவியல் அமைப்பு கொண்ட இம்மாவட்டத்தில் பழங்கற்காலம் தொடங்கி புதிய கற்காலம், பெருங்கற்காலம், பல்லவர்கள், சோழர்கள், கங்கர்கள், நாயக்கர்கள் காலத்தைய எண்ணற்ற தடயங்களைக் கொண்டதாக உள்ளது. அவ்வாறான வரலாற்றுத்தடயங்களைத் தேடி ஆய்வுசெய்து ஆவணப்படுத்தி வருகிறார் தமிழாய்வுத்துறையின் உதவி பேசராசியர் பிரபு. கடந்த 7 ஆண்டுகளில் 70க்கும் மேற்பட்ட வரலாற்றுச் சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.ஆதியூர், அம்பலூர், உம்ராபாத், கல்நார்சாம் பட்டி, கீழ்க்குப்பம், கருப்பனூர், சந்திரபுரம், சல்லியூர், கொடையாஞ்சி, குரும்பேரி, மூக்கனூர், தாமலேரிமுத்தூர், மடவாளம், மரிமாணிக்குப்பம், நரியனேரி, பெருமாப்பட்டு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பல்லவர், சோழர், நாயக்கர் காலத்தைச் சேர்ந்த நடுகற்கள், கல்வெட்டுகள் எனப் பல தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.தமிழக அளவில் இதுவரை நடைபெற்ற அகழாய்வு முடிவுகள் வரலாற்றில் புதியதோர் வெளிச்சத்தைப் பாய்ச்சி வரும் இவ்வேளையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் குண்டுரெட்டியூர் என்ற கிராமத்தில் கடந்த 2017ஆம் ஆண்டில் மேற்கொண்ட கள ஆய்வில், குண்டுரெட்டியூரானது ஏலகிரி மலையின் பின்பக்கச் சரிவின் அடிவாரமாகும். இங்கு கி.பி. 10, 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 5 நடுகற்கள் உள்ளன. அவற்றில் 4 ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டவையாகும்.

ஆய்வுக்கு உட்படுத்தாத ஒரு நடுகல்லை ஆய்வு செய்யச் சென்றபோது அங்குள்ள மலையடிவாரத்தில் சுமார் 80 ஏக்கர் நிலப்பரப்பில் ஏராளமான மண் பானை ஓடுகள் சிதறிக்கிடப்பதைக் கண்டறியப்பட்டது. அவற்றைச் சேகரித்துச் சுத்தம் செய்து பார்க்கையில் அவை பழமையான ஓடுகள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து 8 நாட்கள் மேற்கொண்ட மேற்பரப்புக் களஆய்வின் முடிவில் பல அரிய பொருட்கள் சேகரிக்கப்பட்டன. அவை, சுடுமண் ஊதுகுழாய்கள், கருப்பு சிவப்பு மண்பானை ஓடுகள், தடிமனான சிவப்புப் பானை ஓடுகள், சிவப்பு வண்ணப்பூச்சு பானை ஓடுகள், உடைந்த கெண்டிகள், இருப்புத் தாதுக்கள், கழுத்தில் அணியும் ஆபரணத்தின் மணி, புதிய கற்காலக் கருவிகள், எலும்புத் துண்டுகள், பெரிய சுட்ட செங்கல்லின் ஒரு பகுதி ஆகிய பொருட்கள் நிலத்தின் மேற்பரப்பில் கிடைத்தன. இவை நிலத்தில் உழவுப்பணி மேற்கொள்கையில் வெளிவந்தவையாகும்.மேலும் மனிதர்கள் வாழ உகந்த சூழல் உள்ள பல கற்குகைகள் இம்மலையில் இருப்பதும் தெரியவந்தது. அவற்றில் 2 குகைகளை ஆய்வு செய்ய்யப்பட்டது. ஒன்று மலையடிவாரத்தின் நிலப்பரப்பில் உள்ள குகையாகும். இக்குகையானது 10 பேர் வசிக்க ஏற்ற குகையாக உள்ளது. குகையின் முன் உள்ள பெரிய கல்லில் உணவுப்பொருட்களை அரைத்த தடம் உள்ளது. மேலும் குகை முகப்பில் புருவ அமைப்பு செதுக்கப்பட்டு அதில் பழமையான தமிழ் எழுத்துக்களைப் போலத் தோற்றம் கொண்ட குறியீடுகள் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு கிடைத்த ஒரு மண்பானை ஓட்டில் குறியீடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இக்குகையினை இப்பகுதி மக்கள் ‘கெவி கல்’ என்கின்றனர். இக்குகைக்குச் சற்றுத் தொலைவில் உள்ள ஒரு பாறையில் விளையாடுவதற்குப் பயன்படும் கட்டங்கள் கீறப்பட்டுள்ளது.

மலையடிவாரத்தில் 4 குத்துக்கற்கள், 5 அரவைக் கற்கள், 1 கற்கோடாரி என்று 10 புதிய கற்காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஊருக்கு அருகே உள்ள ஆண்டியப்பனூர் நீர்த்தேக்கத்தின் அருகே பெருங்கற்கால மக்கள் வாழ்ந்த தடயங்கள் பல கண்டறியப்பட்டுள்ளன. இங்குள்ள ‘பாண்டவர் குட்டை’ ‘சின்னப் பாண்டவர் குட்டை’ என்ற இடங்களில் முற்கால மக்களது நினைவுச் சின்னங்களான கற்திட்டைகள் பல காணப்படுகின்றன. மேலும் இவ்வூரில் ‘சித்திரமேழி’ நாட்டார் சபை குறித்த சோழர்காலக் கல்வெட்டும், சோழர்கால சூலக் கல்லும் கண்டறியப்பட்டுள்ளன. ஏலகிரி மலையின் பக்கவாட்டில் அமைந்துள்ள மற்றொரு ஊரான 102 ரெட்டியூர் என்ற இடத்தில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல்வட்டம், கற்குவை போன்றவையும் ‘இரும்பு உருக்கு உலை’ இருந்த தடயமும் அந்த உலையில் காற்றைச் செலுத்தப் பயன்படுத்தப்படும் மண் குழாய்களும் கண்டறியப்பட்டுள்ளன.திருப்பத்தூர் மாவட்டம் குண்டுரெட்டியூரில் மேற்பரப்புக் கள ஆய்வுகளில் ‘வட்டச்சில்லுகள்’ எனும் ஆட்டக்காய்கள் பல கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறாக வரலாற்று சிறப்பு வாய்ந்த இம்மாவட்டத்தில் இனங்காணப்பட்ட இடங்களில் தொல்லியல் துறையினர் முறையான ஆய்வுகளை மேற்கொண்டால் திருப்பத்தூர் மாவட்டத்திலும் மற்றொரு கீழடி கண்டெடுக்க வாய்ப்பு உள்ளது என்று வரலாற்று துறை பேராசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.

3 ஆயிரம் ஆண்டுகள் முந்தைய பாறை ஓவியங்கள்
தமிழர்களது முற்கால வாழ்வியலை அறிய உதவும் தொல்லியல் வரலாற்று ஆவணங்களான, கற்கால ஆயுதங்கள், பாறை ஓவியங்கள், கற்திட்டைகள், கற்பதுக்கைகள், கல்வட்டங்கள், கற்குவைகள், மண்பாண்ட ஓடுகள், நடுகற்கள், சதிக்கற்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் எனப் பல்வேறு தடயங்கள் இம்மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக, திருப்பத்தூர் அடுத்த கந்திலி அருகே உள்ள கெஜல்நாயக்கன் பட்டி அருகே செல்லியம்மன் கொட்டாய் என்ற இடத்தில் 3ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ‘பாறை ஓவியங்கள்’ கண்டறியப்பட்டுள்ளது. குண்டு ரெட்டியூர், 102 ரெட்டியூர், ஆண்டியப்பனூர் ஆகிய இடங்களில் பெருங்கற்காலத் தடயங்கள் பல அமைந்துள்ளன.

இரும்பு உருக்கும் ஆலை இருந்த உறுதியான சான்று
பொதுவாக மனித வாழ்விடங்கள் யாவும் நீர் நிலைக்கு அருகாமையில் தான் அமைக்கப்பட்டிருக்கும் என்பதை நாம் அறிவோம். அதற்கேற்ப குண்டுரெட்டியூர் அருகே உள்ள குகையின் ஓரத்தில் ‘எகிலேரி’ என்ற மிகப்பெரிய நீர்நிலை இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏலகிரி மலையிலில் இருந்து வரும் காட்டாறுகள் பல இந்த நீர்நிலையினை வந்து சேர்கின்றன. இக்குகைக்கு அருகாமையில் உள்ள புதர் மண்டிய மேட்டுப்பகுதியில் இரும்பினை உருக்கும் உலை இருந்ததற்கான உறுதியான சான்றுகள் கிடைத்துள்ளன. மொத்தமாக 7 இரும்பு உருக்கப் பயன்படும் சுடுமண் ஊதுகுழாய்கள் இங்கு கிடைத்துள்ளன. இம்மேட்டினைச் சுற்றிலும் இரும்புத் தாதுக்கள் குவிந்துள்ளன.

Tags : Tirupattur , If research is carried out in Tirupattur like the historical Tirupattur district, there is a chance to find another underground
× RELATED தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய...