விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள கீழக்கொந்தை மேம்பாலம் அருகே நேற்று காலை 11 மணியளவில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கிய 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தில் சிக்கியவர்கள் பிரபல இயக்குனர் மனோஜ்குமார் மற்றும் அவரது மனைவி செல்வி உள்பட 3 பேர் என்பது தெரியவந்தது. இயக்குனர் மனோஜ்குமார், மருதுபாண்டி, சாமுண்டி, வானவில், வண்டிச்சோலை சின்ராசு உள்ளிட்ட பல்வேறு தமிழ்ப்படங்களை இயக்கியவர். இவர் பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மைத்துனர் ஆவார்.
