சென்னை: போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொங்கலையொட்டி பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதை பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்யும் நடவடிக்கையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரை கொண்டு தமிழகம் முழுவதும் 45 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் 13ம் தேதி (நேற்று முன்தினம்) வரை 3,337 ஆம்னி பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டு 547 சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தணிக்கையின்போது இணக்ககட்டணம் ரூ.2,46,000 மற்றும் வரியாக ரூ.41,77,362 வசூலிக்கப்பட்டுள்ளது, மேற்கண்ட சிறப்பு தணிக்கையில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட 30 ஆம்னி பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அதிக கட்டணம் வசூலிக்கப்படும் ஆம்னி பேருந்துகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பயணிகள் எந்தவித சிரமமின்றி அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்றடைய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
