×

சிபிஎஸ்இயில் படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்: தமிழில் தேர்ச்சி பெறாதவரை பணியில் சேர்க்கும் உத்தரவுக்கு தடை விதித்து ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெறாதவரை பணியில் சேர்க்கும் தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதித்த ஐகோர்ட் கிளை, தமிழ்நாட்டில் தமிழ் ெதரியாதவர்களை ஏன் வேலையில் சேர்க்க வேண்டுமென கேள்வி எழுப்பியுள்ளனர்.தேனி மாவட்டம், கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெய்குமார். இவர் தேனி மின் பகிர்மான வட்டத்தில் இளநிலை உதவியாளராக 2018ல் பணியில் சேர்ந்தார். இவர் சிபிஎஸ்இ பள்ளியில் படித்தவர். தமிழ் வழியில் கல்வி பயிலாததால், பணியில் சேர்ந்து 2 ஆண்டிற்குள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தமிழ் மொழித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாததால், இவரை பணியிலிருந்து விடுவித்து கண்காணிப்பு பொறியாளர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து தன்னை மீண்டும் பணியில் சேர்க்கக்கோரி ஜெய்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரணை செய்த தனி நீதிபதி, பிறப்பித்த உத்தரவில், ‘‘தமிழ்நாட்டில் அலுவல் மொழி தமிழ். அரசின் அனைத்து நடவடிக்கைகளும் தமிழில் தான் நடைபெறுகிறது.

மின்வாரியத்திலும் அப்படியே. இதனால் ஒவ்வொரு ஊழியருக்கும் தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். மின்வாரியத்தின் நடவடிக்கை தவறல்ல. இருந்தபோதும் மனுதாரர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால் மீண்டும் தமிழ் மொழி தேர்வு எழுத ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து மீண்டும் அவருக்கு தமிழ் மொழி தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், இரண்டாவதாக எழுதிய தேர்விலும் தேர்ச்சி பெறாததால் அவரை பணி நீக்கம் செய்து மின் வாரிய பொறியாளர் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து தனது பணி நீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி ஜெய்குமார் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘‘தமிழ்நாட்டில் வேலை செய்யக்கூடிய அரசு பணியாளர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த தேர்வு நடத்தப்பட்டது.

ஆனால், மனுதாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘பச்சை தமிழன்’ என்பதால் இவருக்கு பணி வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டிருந்தார். ‘‘தனி நீதிபதியின் இந்த உத்தரவு அரசு ஊழியர்களின் பணி வரன்முறைக்கு எதிராக உள்ளது. எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என தமிழ்நாடு மின்சார வாரியம் தரப்பில் ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், பூர்ணிமா ஆகியோர், ‘‘தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் தமிழ் வழியில் கல்வி கற்கவும் இல்லை. தமிழ் மொழி தேர்வில் வெற்றி பெறவும் இல்லை.

இவ்வாறு உள்ள சூழலில் எவ்வாறு அவரால் பணியில் நீடிக்க முடியும்? சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்துவிட்டு அரசு வேலைக்கு வந்துவிடுவது, தமிழ்நாட்டில் தமிழ் தெரியாதவர்களை ஏன் வேலையில் சேர்க்க வேண்டும்? சிபிஎஸ்இ கல்வியில் படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள். தமிழ்நாடு அரசு பணியில் பணி புரிய வேண்டும் எனில், தமிழ் மொழி பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அரசின் பணியாளருக்கு தமிழ் தெரியாது எனில் என்ன செய்வது? இங்கு மட்டும் அல்ல. எந்த மாநிலத்தில் அரசு பணி புரிந்தாலும், அந்த மாநிலத்தின் மொழி தெரிந்து இருக்க வேண்டும். தெரியவில்லை எனில் என்ன செய்வது’’ எனக் கூறியுள்ள நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும் மனு மீதான விசாரணையை தள்ளி வைத்தனர்.

The post சிபிஎஸ்இயில் படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்: தமிழில் தேர்ச்சி பெறாதவரை பணியில் சேர்க்கும் உத்தரவுக்கு தடை விதித்து ஐகோர்ட் கிளை அதிரடி appeared first on Dinakaran.

Tags : CBSE ,Madurai ,High Court ,Tamil Nadu ,Jayakumar ,Kallipatti, Theni ,Theni… ,
× RELATED முதலமைச்சரின் விரிவான மருத்துவக்...