சென்னை: இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: டாஸ்மாக் கடைகளில் மாணவர்களுக்கும், 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கும் மதுபானங்களை விற்கக்கூடாது என்ற குரல் ஓங்கி ஒலிக்கின்ற நிலையில், இளைஞர்களை சீரழிக்கும் வகையில் தானியங்கி மூலம் மதுபான விற்பனையை துவக்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மேலும், தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட இடங்களில் இதுபோன்ற இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளதாகவும் வந்துள்ள செய்திகள், பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், குறிப்பாக இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் என எல்லோரும் வந்து செல்லும் மால்களில் டாஸ்மாக் தானியங்கி இயந்திரம் மக்களுக்கு என்ன மாதிரியான எண்ணத்தை விதைக்கும் என்ற யோசனை இல்லையா, ஏற்கனவே பள்ளி மாணவ, மாணவிகள் சீருடை அணிந்தே மதுபானங்கள் அருந்துவது ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளது. சாதாரண குளிர்பானங்களை அருந்துவதே உடல் நலத்திற்கு கேடு என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி வரும் நிலையில், மதுபானங்களை தாராளமாக பயன்படுத்த இளைஞர்களை தூண்டுவது தவறான நடவடிக்கையாகும். இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.
The post இயந்திரம் மூலம் மது விற்பனை திட்டத்தை கைவிட வேண்டும்: அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை appeared first on Dinakaran.
