புதுடெல்லி: துணை ராணுவ வீரர்களுக்கு காங்கிரஸ் என்றும் துணை நிற்கும் என்றும் சிஏபிஎப் சட்டத்தின் கீழ் அவர்கள் எதிர்கொள்ளும் பதவி உயர்வில் பாகுபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார். மத்திய ஆயுத படைகள் (சிஏபிஎப்) மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. புதிய சட்டத்தின்படி, 50 % பணியிடங்கள் இந்திய போலீஸ் சேவையிலிருந்தும் (ஐபிஎஸ்) இன்ஸ்பெக்டர் ஜெனரல் பதவியிலும், குறைந்தபட்சம் 67 % பணியிடங்கள் கூடுதல் டைரக்டர் ஜெனரல் பதவியிலும் அயற்பணி மூலம் நிரப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி முகநூலில் பதிவிட்டுள்ளதாவது: துணை ராணுவப் படை வீரர்கள் நாட்டைப் பாதுகாக்கத் தங்கள் அனைத்தையும் பணயம் வைத்தாலும், தங்களது சொந்தப் படைக்குத் தலைமை தாங்கும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களின் சேவைக்கும் அர்ப்பணிப்புக்கும் ஈடாக, துணை ராணுவ படையினருக்கு உரிய நேரத்தில் பதவி உயர்வுகளோ அல்லது தங்கள் சொந்தப் படையை வழிநடத்தும் உரிமையோ கிடைப்பதில்லை. தன்னுடைய படையின் தலைமைப் பதவியில் அமர்த்த முடியாத ஒரு அமைப்பின் மன உறுதியை எப்படிப் பாதுகாக்க முடியும். இந்த இளைஞர்கள் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடச் சொல்லப்படுகிறார்கள், நக்சல்களை எதிர்த்துப் போராடச் சொல்லப்படுகிறார்கள். ஆனால் நாமோ, உங்கள் அமைப்பை நீங்கள் நடத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று சொல்கிறார்கள். இதனால்தான், அரசு செய்திருப்பது நியாயமற்றது என்று கூறுகிறேன். ஆனால், பிஎஸ்எப், சிஆர்பிஎப் உள்ளிட்ட துணை ராணுவப் படைகளுக்கும் நான் உறுதியளிக்கிறேன். நானும் காங்கிரஸ் கட்சியும் உங்களுடன் இருக்கிறோம், உங்களுக்கு நீதி கிடைக்கும். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது, உங்களுக்கு நூறு சதவீதம் நீதி வழங்குவோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
