போபால்: இந்தூர் மாநகராட்சியில் பட்ஜெட் குறித்த விவாதம் கடந்த புதன்கிழமை நடந்தது. இதில், கலந்து கொண்ட பெண் கவுன்சிலர்கள் பவுசியா ஷேக் அலீம்(காங்.), ரூபினா இக்பால்(சுயே.) ஆகியோர் வந்தே மாதரம் பாடலை மறுத்து விட்டனர். இதற்கு பாஜ கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் அவை தலைவர் முன்னாலாலின் இருக்கைக்கு அருகே சென்று கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து நிலைக்குழு தலைவர் முன்னாலால், பவுசியாவை அவையை விட்டு வெளியேறுமாறு கூறினார்.வந்தே மாதரம் பாட மறுப்பு தெரிவித்த பவுசியா மீது வழக்கு பதியப்படும் என்று பாஜவினர் தெரிவித்தனர். பவுசியா கூறுகையில்,‘‘ வந்தே மாதரம் பாடுவதற்கு எனது மதம் அனுமதிக்கவில்லை. என்றாலும், தேசியப் பாடலை மதிக்கிறேன் ’’ என்றார். மபி முதல்வர் மோகன் யாதவ், வந்தே மாதரம் பாடலை பாட காங்கிரஸ் கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றால் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
