கடலூர், மார்ச் 31: கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நேற்று பிரதோஷத்தையொட்டி, மூலவர் சன்னதி எதிரே உள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு, பாடலீஸ்வரர் கோயிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. பெண்கள், தாய்மார்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டதால் கோயில் நிர்வாகிகள் மற்றும் போலீசார் ஒலிபெருக்கி மூலம் தங்களது தங்க நகைகளை பாதுகாத்து கொள்ளுமாறு எச்சரிக்கை விடுத்தனர்.
