ஊத்துக்கோட்டை: ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீரால் தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டிற்கு வந்தது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்தாண்டு ஜூலை 1ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் கடந்த செப்டம்பர் 15ம் தேதி வரை 2.50 டிஎம்சி தண்ணீர் வழங்கியுள்ள. மீதமுள்ள தண்ணீரை அக்டோபர் மாதத்திற்குள் ஆந்திர அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 27ம் தேதி இரவு 9 மணிக்கு திடீரென கண்டலேறுவில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு 3.8 டி.எம்.சி மட்டுமே கிடைத்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில் ஜனவரி மாதம் வழங்க வேண்டிய கிருஷ்ணா தண்ணீரை பிப்ரவரி 23ம் தேதி வினாடிக்கு 200 கனஅடி வீதமும், மறுநாள் காலை 500 கன அடியாகவும் திறக்கப்பட்டது. பின்னர் வினாடிக்கு 2400 கன அடியாக உயர்த்தி திறக்கப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு கடந்த மாதம் 25ம் தேதி இரவு வந்தது. இந்த தண்ணீர் மறுநாள் பூண்டியில் உள்ள சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை அடைந்தது. தற்போது தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு வினாடிக்கு 420 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தண்ணீர் திறக்கப்பட்ட ஒரு மாதத்தில் தமிழகத்திற்கு 1 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது.
