வல்லம், பிப்.25: தஞ்சாவூர் அருகே சாலையை கடக்க முயன்ற மளிகை கடைக்காரர் கார் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் என்பவரின் மகன் கோபி (53). மளிகை கடை உரிமையாளர். இவர், மளிகை கடையை திறப்பதற்காக நேற்று காலை தனது பைக்கில் மாரியம்மன் கோயில் ஆர்ச் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது திருவாரூரில் இருந்து தஞ்சை நோக்கி வந்த கார் கோபி ஓட்டி வந்த பைக் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட கோபி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்த தாலுகா போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபி உடலை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் சிவகாசி பகுதியை சேர்ந்த சத்திய குருசாமி என்பவரின் மகன் திருமுருகனை (51) பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
