- உயர் நீதிமன்றம்
- தமிழ்நாடு அரசு
- சென்னை
- இலஞ்சம் திணைக்களம்
- நகராட்சி நிர்வாகத் துறை
- தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை
சென்னை: நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்கள், டெண்டர்கள் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பான புகார் மீது வழக்கு பதிவு செய்யுமாறு லஞ்ச ஒழிப்பு துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யக் கூறி அமலாக்கத் துறை சார்பில் தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று அதிமுக எம்.பி. இன்பதுரை மற்றும் ஆதிநாராயணன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வேறொரு வழக்கு விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை டிஜிபிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அவற்றின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அமலாக்கத் துறையின் கடிதம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நகராட்சி நிர்வாக துறை நியமன முறைகேடு, டெண்டர் முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை வழங்கிய ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளது. எனவே, அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிபு துறை உடனடியாக வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஆதிநாராயணன் என்பவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
