அயிரை மீன் குழம்பு

தேவையான பொருட்கள்:

அயிரை மீன் – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 250 கிராம் (தோலுரித்தது)
தக்காளி – 2 (நறுக்கியது)
பூண்டு – 10 பற்கள்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 12/ டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
புளி – சிறிய எலுமிச்சை அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது (அலங்கரிக்க)

அரைப்பதற்கு…

துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் – 3

செய்முறை:

முதலில் அயிரை மீனை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். மிக்ஸியில் தேங்காய் மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் அதில் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு மென்மையாக வதக்க வேண்டும். பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து வதக்கி, பின் புளிச்சாற்றினை ஊற்றி, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும். அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து, உப்பு சுவை பார்த்து பச்சை வாசனை போக கொதிக்க விட்டு, பின் அதில் அயிரை மீனை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், அயிரை மீன் குழம்பு ரெடி!!!

The post அயிரை மீன் குழம்பு appeared first on Dinakaran.