கும்மிடிப்பூண்டி 3, 5வது வார்டில் மக்களை தேடி மருத்துவ முகாம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 3வது மற்றும் 5வது வார்டு பகுதிகளான சாய்பாபா நகர், என்எம்எஸ் நகர் ஆகிய 2 இடங்களில் நேற்று மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாம்களை வார்டு கவுன்சிலர்கள் சி.கருணாகரன், அப்துல்கரீம் ஆகியோர் துவக்கி வைத்தனர். ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்காக சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மக்கள் வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை பெற்ற 100க்கும் மேற்பட்டோருக்கு இலவச மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜ் கூறுகையில், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் நடைபெற்ற மக்களை தேடி மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை 12,109 பேர். இதில் ரத்த கொதிப்பு 4,764, சர்க்கரை நோய் 4,662, இரண்டும் உள்ள நோயாளிகள் 2,683 உள்ளனர். இங்கு 32 மகளிர் சுகாதார தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு, நடமாடும் மருத்துவ முகாம்களில் சேவை செய்து வருகின்றனர். இவர்கள் 2 மாதத்துக்கு ஒருமுறை அந்தந்த பகுதிக்கு சென்று மக்களை பரிசோதித்து மருந்து, மாத்திரைகள் வழங்கி வருகின்றனர். இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.

The post கும்மிடிப்பூண்டி 3, 5வது வார்டில் மக்களை தேடி மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: