திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆர்டிஓ விசாரணை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குறித்து ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், பில்லூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் என்பவரின் மகள் யோகேஸ்வரி (22). இவர், கடந்த 2 வருடங்களாக செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் தங்கி, அதே பகுதியில் தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். யோகேஸ்வரி தனது உறவினரான கணேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கணேஷ், யோகேஸ்வரியை பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்துள்ளார். பின்னர், 2 பேரும் சிங்கபெருமாள் கோயில் அருகே மண்டப தெரு பகுதியில் தனியாக வீடு வாடகை எடுத்து வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கணேஷ் தனது சொந்த ஊருக்கு சென்று தாய், தந்தையை பார்த்துவிட்டு வருவதாக நேற்று முன்தினம் யோகேஸ்வரிடம் தெரிவித்தார். அதற்கு, யோகேஸ்வரி மறுப்பு தெரிவித்து போகக்கூடாது என்று கணேஷிடம் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இதில், 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்துள்ளது. வழக்கம்போல கணேஷ் இரவுநேர பணிக்கு சென்றுவிட்டு, காலையில் வீட்டிற்கு வந்துள்ளார்.அப்போது, வீட்டின் கதவை தட்டியபோது திறக்கப்படாததால், சந்தேகமடைந்த கணேஷ், ஜன்னல் வழியாக பார்த்தபோது மின் விசிறியில் யோகேஸ்வரி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதனைகண்டு, அதிர்ச்சியடைந்த கணேஷ், இதுகுறித்து மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், யோகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, இறந்த யோகேஸ்வரியின் தந்தை வடிவேல், மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின்பேரில், செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகினறனர்.

The post திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆர்டிஓ விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: