ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியம்…குளிர்ச்சிக்கு குளிர்ச்சி மருத்துவ குணமுடைய மகத்துவமிக்க மண்பானை

*எல்லா காலத்திற்கும் ஏற்றது

*சித்த மருத்துவர்கள் அட்வைஸ்

திண்டுக்கல்/பழநி : வேனிற் காலத்தில் நீரைக் குளிரவைத்துக் குடிப்பதற்காக வாய் குறுகிய மண்பாண்டங்களைச் சங்ககாலத் தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர். வாய் சிறுத்த பானைகளை, ‘தொகுவாய் கன்னல்’என்று பத்துப்பாட்டில் ஒன்றான ‘நெடுநல்வாடை’ நூல் குறிப்பிடுகிறது. ஒரு கிலோ களிமண்ணில் ஓராயிரம் வடிவங்களை சிற்பமாக்கி கலைநயமிக்க பொருட்களை செதுக்கும் திறன் பெற்றவர்கள் மண்பாண்ட தொழிலாளர்கள்.

அதிலும் அவர்களால் தயாரிக்கப்படும் மண்பானைகளுக்கு உள்ள மகத்துவங்கள் ஜாஸ்தி. மண்பானை என்பது இயற்கை சுத்திகரிப்பு என்றே கூறலாம். மண்பானை தண்ணீரை சமையல், குடிநீருக்கு பயன்படுத்தினால் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் நீங்கும். மண்பானை தண்ணீரில் தேற்றான்கொட்டை போட்டால், சுத்தமான குடிநீர் கிடைக்கும். இதை தொடர்ந்து குடிக்கும்போது, இருதய நோய் குணமாகும்.

மண்பானை தண்ணீரில் செப்புத்தகடு போட்டால் கழிவுகள் தகட்டில் தேங்கும், சுவையாக இருக்கும். அதனால் தான், நம் முன்னோர்கள், சமைக்க, தாகம் தீர்க்க என அனைத்திற்கும் பெரும்பாலும் மண்பாண்டங்களையேப் பயன்படுத்தினர். இதன் காரணமாகவே அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், நோய்களுக்கு இடம்கொடுக்காமலும் வாழ்ந்தனர். அதன்பின் மாறிவிட்ட மாடர்ன் கலாசாரத்தால் மண்பாண்டங்கள் மறக்கப்பட்டது.

அதன்பின், அங்குமிங்குமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட,மறைந்த முறைகளை தேட துவங்கினர். மண்பானைக்கு என்றுமே தனிசுவை உண்டு. நட்சத்திர ஓட்டல்களில் கூட மண்பானை சமையல் என விளம்பரப்படுத்தும் அளவிற்கு இதற்கு தனி மவுசு இன்றும் உள்ளது. அதனால், இயற்கை முறையிலான மண்பானைகளை மக்கள் வாங்குவதும் அதிகரித்து உள்ளது.

இதுகுறித்து இயற்கை ஆர்வலகள் கூறியதாவது: பூமியில் இருந்து எடுக்கப்படும் மண்ணைக் கொண்டு தயாரிக்கும் மண்பாண்டங்களில் இயற்கையாகவே பல்வேறு வைட்டமின்கள் உள்ளன. அதில் பி12 வைட்டமினும் அடங்கியுள்ளது. மண்பானையில் சிறு சிறு துவாரங்கள் இருக்கும். வெளியில் உள்ள வெப்பநிலை அதிகரிக்கும்போது, இந்த நுண்துவாரங்கள் வழியாக பானையின் வெப்பமும், தண்ணீரின் வெப்பமும் தொடர்ந்து ஆவியாவதன் மூலம் வெளியேற்றப்படுகிறது. அதனால்தான் மண்பானையில் சேமிக்கப்படும் தண்ணீர் சில்லென்று குளிர்ச்சியாக இருக்கிறது. மண்பானை தண்ணீர் இயற்கையானது. அந்த தண்ணீரை தாகம் எடுக்கும் போதெல்லாம் உடனே அருந்தலாம்.மேலும் எலுமிச்சை, புதினாவையும் தண்ணீரில் சேர்த்தால் இன்னும் குளிர்ச்சியாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது. மண்பானைகளை வைப்பதற்கு முன் கீழே மணல் வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும், என்றனர்.

சிறந்த வாட்டர் பில்டர்

கல்பனா புலிப்பாணி, சித்த மருத்துவர், பழநி: உலகத்திலேயே மிகச் சிறந்த வாட்டர் பில்டர் மண் பானை. மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து 2 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண் பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. பானையில் ஊற்றிக் குடிக்கும் நீரோடு சந்தனச் சக்கைகள், நன்னாரி வேர், வெட்டிவேரைப் போட்டு ஊறவைத்து, வடிகட்டி குடிப்பது சுட்டெரிக்கும் வெயிலுக்குச் சிறந்த பானம் என்கிறது சித்த மருத்துவம்.

அதனால்தான் இன்றளவும் நாட்டு மருந்து காய்ச்சுபவர்கள் மண் பானையிலேயே காய்ச்சுகின்றனர். குளிர்பதனப் பெட்டிகளைத் தவிர்த்து, நீரையும் பானங்களையும் பானைகளில் வைத்தே குளிர்ச்சியாகப் பயன்படுத்தலாம். மண் பானைகளை பயன்படுத்தினால் வியாதிகள் வராது. மண் பானை மருத்துவ குணமுடையது. அதனால், கோடை காலம் மட்டுமல்ல, எல்லா காலங்களில் மண்பானை பயன்படுத்தலாம்.

The post ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியம்…குளிர்ச்சிக்கு குளிர்ச்சி மருத்துவ குணமுடைய மகத்துவமிக்க மண்பானை appeared first on Dinakaran.

Related Stories: