ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணைக்கு மறுக்கும் நாகேந்திரன் அமைதியாகவே இருப்பதாக தகவல்

பெரம்பூர்: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான பிரபல தாதா வியாசர்பாடி நாகேந்திரனை போலீசார் கைது செய்தனர். நாகேந்திரனை 3 நாட்கள் காவலில் எடுத்து செம்பியம் போலீசார் விசாரித்து வரும் நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டமிட்டது எப்படி? ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல வேண்டும் என அணுகியது யார்? ஆம்ஸ்ட்ராங்குடன் முன்விரோதம் ஏற்பட்டது எப்படி? சிறைக்குள் சந்தித்த ரவுடிகள் யார்? என பல்வேறு கேள்விகளை முன்வைத்து நாகேந்திரனிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், நாகேந்திரன் பெரும்பாலான கேள்விகளுக்கு அமைதியாகவே இருந்ததாகவும், அவ்வப்போது பதில் கூறினாலும் தனக்கும் இந்த கொலைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறுவதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமனையும் நேரில் வைத்து விசாரித்தும் நாகேந்திரன் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது.

நாகேந்திரனை கைது செய்யும்போதே வாரண்டில் கையெழுத்திட மறுத்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போதும் போலீஸ் காவலில் செல்லமாட்டேன் என கூறி முறையிட்டதாகவும் தகவல் வெளியானது. வாரத்தில் 2 முறை டயாலிசிஸ் செய்து வருவதாக நீதிமன்றத்தில் முறையிட்ட நாகேந்திரன், போலீஸ் விசாரணையிலும் தனது உடல் நிலையை காரணம் காட்டிவிட்டு தொடர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் போலீசார், நாகேந்திரன் மற்றும் அஸ்வதாமனிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரக்காடு நிலம் சம்பந்தமாக போலீசார் தரப்பில் பல கேள்வி கேட்டதாகவும், அதற்கு பல தவறான பதில்களை அஸ்வத்தாமன் தெரிவித்தாக கூறப்படுகிறது. தற்போது போலீசாருக்கு கிடைத்த ஆதாரங்களை காட்டி தொடர்ந்து குறிப்பிட்ட நில பிரச்னை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணைக்கு மறுக்கும் நாகேந்திரன் அமைதியாகவே இருப்பதாக தகவல் appeared first on Dinakaran.

Related Stories: