பெரியபாளையம் அருகே லாரி மீது வேன் மோதி 4 பேர் படுகாயம்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே லாரி மீது வேன் மோதி 4 பேர் படுகாயமடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்கு, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் இருந்து சுந்தர்ராஜன்(62) என்பவர் தனது குடும்பத்துடன் ஒரு வேனில் 20 பேருடன் நேற்று சென்றார். அப்போது டிரைவர் ஜெகதீசன்(31) என்பவர் வேனை ஓட்டினார்.

அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை நோக்கிச்சென்ற ஒரு மினி லாரி ஓட்டுனர் பெரியபாளையம் அருகே தும்பாக்கம் பகுதியில் லாரிக்கு டீசல் போடுவதற்காக திருப்பியுள்ளார். இதில் சற்றும் எதிர்பாராத விதமாக வேனை ஓட்டி வந்த ஜெகதீசன் மினி லாரியில் மோதினார். அப்போது அந்த லாரி பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டு விட்டு வெளியே வந்த மற்றொரு மினி வேன் மீது மோதியது.

இதில் வேனில் பயணம் செய்த சுந்தர்ராஜன், செல்வி(53), ரமணி(50) மற்றும் வேன் டிரைவர் ஜெகதீசன்(31) ஆகிய 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரியபாளையம் போலீசார் சம்பவயிடத்திற்கு வந்து, காயமடைந்த 4 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெரியபாளையம் அருகே லாரி மீது வேன் மோதி 4 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: