தாம்பரம், குன்றத்தூர் மற்றும் அம்பத்தூரில் தலைமை கூட்டுறவு வங்கியின் புதிய கிளைகள் தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: தாம்பரம் கிழக்கு, தாம்பரம் மேற்கு, குன்றத்தூர் மற்றும் அம்பத்தூரில் மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியின் நான்கு புதிய கிளைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி 1905ம் ஆண்டு தொடங்கப்பட்டு 118 ஆண்டுகளை கடந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அகில இந்திய அளவில், செயல்படும் அனைத்து தலைமைக் கூட்டுறவு வங்கிகளில், தொடங்கியது முதல் தொடர்ந்து லாபத்தில் இயங்கி வரும் ஒரே வங்கி தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி. சென்னையில் சுமார் 5 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவைகளை அளித்து வரும் இந்த வங்கி தற்போது 47 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த வங்கி, 2022-23ம் நிதியாண்டில் ரூ.31,484 கோடி அளவிற்கு வர்த்தகம் மேற்கொண்டு, ரூ.114.78 கோடி நிகர லாபமாக ஈட்டியுள்ளது. வங்கியின் முதலீடுகள் ரூ.4,615 கோடியாகவும், வாடிக்கையாளர்களின் வைப்பீடுகள் ரூ.12,486 கோடியாகவும் உள்ளது. வங்கியில் தமிழ்நாடு அரசின் பங்கு மூலதனம் ரூ.20.26 கோடி. வணிக வங்கிகளுக்கு நிகராக, வங்கியின் அனைத்துச் சேவைகளும் கணினி வழியில் மட்டுமே நடக்கிறது. மேலும், துரிதப் பணப் பரிமாற்றச் சேவைகளான இணையவழி வங்கிச் சேவை, கைபேசி வழிச்சேவை, தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்கள் என அனைத்து கணினிவழி வசதிகளையும் இந்த வங்கி கொண்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் எல்லைகள் விரிவடைந்ததை தொடர்ந்து, விரிவாக்கம் செய்யப்படாமலிருந்த இந்த வங்கியின் கிளைகள், கூட்டுறவுத் துறையின் 2023-24ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க, இந்திய ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்று தாம்பரம் கிழக்கு, தாம்பரம் மேற்கு, குன்றத்தூர் மற்றும் அம்பத்தூர் ஆகிய இடங்களில் நான்கு புதிய வங்கிக் கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

The post தாம்பரம், குன்றத்தூர் மற்றும் அம்பத்தூரில் தலைமை கூட்டுறவு வங்கியின் புதிய கிளைகள் தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: