தங்க நகைக் கடன் பெறும் பெண் தொழில்முனைவோர்கள் : நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் சென்னை முதலிடம்!!

சென்னை : நாடு முழுவதும் உள்ள பெண் தொழில் முனைவோர்களில் 53% பேர் கடன் பெறுவதற்கு தங்கத்தையே அடமானமாக வழங்குவதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. இதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. கிரைஸில் நிறுவனம் மற்றும் டிபிஎஸ் வங்கி ஆகியவை இணைந்து பெண் தொழில் முனைவோர்கள் இடையே ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது. அதன் முடிவுகளின்படி நிதி நிறுவனங்களில் கடன் பெரும் தொழில் முனைவோர்கள் தங்கத்தையும் அதற்கு அடுத்தப்படியாக சொத்துக்களையும் அடமானமாக வழங்குவதாக தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பெண் தொழில் முனைவோர்களில் 53% பேர் தங்கத்தை அடமானமாக வைத்து கடன் பெறுவதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

பெரு நகரங்களில் தங்க நகைக் கடன் பெறும் பெண் தொழில்முனைவோர்களை பொறுத்தவரை சென்னை(52%) முதலிடம் வகித்துள்ளது. சென்னைக்கு அடுத்து 22 முதல் 25 சதவீதத்துடன் மும்பை, டெல்லி ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்கள் பிடித்துள்ளன. மிக குறைவாக கொல்கத்தாவில் 11% பெண் தொழில்முனைவோரே தங்கத்தை அடகு வைத்து கடன் பெறுகின்றனர். குறிப்பாக நாடு முழுவதும் 36 முதல் 45 வயது பெண் தொழில்முனைவோர்கள் 23% பேர் தங்கத்தை அடகு வைத்து கடன் பெறுகின்றனர்.இதர வயது பெண் தொழில்முனைவோர்களிடம் தங்கத்தை அடகு வைக்கும் வழக்கம் குறைவாக உள்ளது.

நாடு முழுவதும் 22% பெண் தொழில்முனைவோர்கள் வங்கிகளிடம் இருந்து நேரடியாக கடன் பெறுகின்றனர். பெருநகரங்களில் 65% பெண் தொழில்முனைவோர்கள் எந்தவித தொழில் கடன்களும் பெறுவதில்லை. அவர்களில் 39% பெண் தொழில்முனைவோர்கள் தங்களது சொந்த சேமிப்பை முதலீடாக்குகின்றனர். 73% பெண் தொழில்முனைவோர்கள் யு.பி.ஐ. மூலம் தங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் பெறுகின்றனர். 87% பெண் தொழில்முனைவோர்கள் தங்களது தொழில் தொடர்பான பரிவர்த்தனையை யு.பி.ஐ-ல் செய்கின்றனர்.

The post தங்க நகைக் கடன் பெறும் பெண் தொழில்முனைவோர்கள் : நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் சென்னை முதலிடம்!! appeared first on Dinakaran.

Related Stories: