வருமான வரித்துறைக்கு போலி பணி நியமன ஆணைரூ. 35 லட்சம் மோசடி செய்த சேலம் பாஜ நிர்வாகி கைது

சேலம்: சேலத்தில் முன்னாள் ராணுவவீரரின் மகனுக்கு வருமான வரித்துறையில் அதிகாரி பணிக்கு போலி நியமன ஆணை வழங்கி ரூ. 35 லட்சம் மோசடி செய்த பாஜ நிர்வாகியை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.  சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மேச்சேரி சாம்ராஜ்பேட்டை கந்தசாமிநகரை சேர்ந்தவர் ராஜீ (58), முன்னாள் ராணுவ வீரர். இவர் சேலம் மாவட்ட எஸ்பி அருண்கபிலனிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், தனக்கு மேச்சேரி பகுதியை சேர்ந்த பாஜ பிரமுகர் கமலக்கண்ணன் (52) அறிமுகமானார். அவரது குடும்பத்தில் 2 பேர் கிராம நிர்வாக அலுவலராக உள்ளனர். அவர் என்னிடம், உங்கள் மகனுக்கு விளையாட்டு வீரர்கள் கோட்டாவில் வருமான வரித்துறையில் வேலை வாங்கித்தருகிறேன் எனக்கூறி பணம் கேட்டதால், முதலில் ரூ. 25 லட்சம் கொடுத்தேன். அதற்கு அவர், கடந்த 2022 ஜூன் மாதம் வருமான வரித்துறை அதிகாரிக்கான பணி நியமன ஆணை நகலை கொடுத்தார். ஒரிஜினல் ஆணை தபாலில் வரும் எனத் தெரிவித்தார். பிறகு மேலும் ரூ. 10 லட்சம் வாங்கிக் கொண்டார்.

அப்போது அவர் வழங்கிய பணி நியமன ஆணையை கொண்டு, வருமான வரித்துறை அலுவலத்தில் பணியில் சேர எனது மகன் சந்திரமோகன் சென்றபோது, அது போலியானது என்று தெரிந்தது. உடனே கமலக்கண்ணனிடம் கேட்டபோது, இனி மற்றொரு ஆணை வரும் என்றார். அதுவும் போலியான ஆணையாக இருந்தது. அதனால், எனது மகனுக்கு வருமான வரித்துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ. 35 லட்சம் மோசடி செய்த கமலக்கண்ணன் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும், எனக்கூறியிருந்தார். இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், முன்னாள் ராணுவ

வீரர் ராஜீவின் மகன் சந்திரமோகனுக்கு ஆந்திராவில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்ற போலி பணி நியமன ஆணையை கமலக்கண்ணன் வழங்கியதும், அதற்காக ரூ. 35 லட்சத்தை வாங்கி மோசடி செய்ததும் தெரியவந்தது. கமலக்கண்ணன் தற்போது சேலம் மேற்கு மாவட்ட பாஜ ஓபிசி அணி பொதுச்செயலாளராக இருந்து கொண்டு, பணம் கொடுத்த ராஜீயை மிரட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து கமலக்கண்ணன் மீது பண மோசடி, போலி நியமன ஆணை வழங்கியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, நேற்று அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர், இதேபோல் வேறு யாரிடமும் மோசடி செய்துள்ளரா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வருமான வரித்துறைக்கு போலி பணி நியமன ஆணைரூ. 35 லட்சம் மோசடி செய்த சேலம் பாஜ நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Related Stories: