இதுபோல் இந்த போட்டியில் சுப்மன்கில்லும் அபாரமாக ஆடி 124 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த போட்டியில் நாங்கள் கடும் அழுத்தத்தை சந்தித்தோம். எங்களுக்கு இங்கிலாந்து பவுலர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தனர். எனினும் எங்களது தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடி எங்களுக்கு நல்ல அடித்தளத்தை போட்டுக் கொடுத்தனர். இதேபோல் துருவ் எனக்கு நல்ல கம்பெனி கொடுத்தார். இதன் மூலம் என் மீது இருந்த அழுத்தம் குறைந்தது. இதையடுத்து சூழலுக்கு தகுந்தார் போல் இன்னிங்சை கட்டமைக்க திட்டமிட்டோம். இங்கிலாந்து வீரர்கள் பவுண்டரியை விடக்கூடாது என்பதற்காக எல்லைக்கோட்டில் நின்று கொண்டார்கள். எனவே இதனை ஒரு வாய்ப்பாக கருதி நாங்கள் சிங்கிள்ஸ்களை அதிகம் எடுக்க தொடங்கினோம். துருவ் ஜூரல் முதல் இன்னிங்ஸில் நன்றாக விளையாடினார். அவர் எந்த மனநிலையில் இருந்தாரோ அதே மனநிலையை நானும் ஏற்படுத்திக் கொண்டேன். நான் இந்த தொடரில் அதிகம் எல்பிடபிள்யூ ஆனேன். இம்முறை அப்படி ஆகிவிடக் கூடாது என்று எண்ணினேன். அதன் காரணமாக என் கால்களை நான் பயன்படுத்தி பேட்டிங் செய்யும்போது இறங்கி வந்து ரன்கள் சேர்த்தேன். இதனால் இங்கிலாந்து விரித்த வலையில் இருந்து தப்பித்தேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடரை வெல்வது என்பது எங்களுக்கு மிகவும் முக்கியமான விஷயமாகும். இந்த தொடரில் அனுபவ வீரர்கள் பலரும் இல்லை. முதல் டெஸ்ட்டுக்கு பிறகு கே.எல்.ராகுல் விலகி சென்றதும் எங்களுக்கு பின்னடைவாக இருந்தது. ஆனால் ரோகித் சர்மா எங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தார். எங்களுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தார். எங்களை சுதந்திரமாக விளையாட அவர் வற்புறுத்தினார்’’ என்றார்.
The post `இங்கிலாந்து விரித்த வலையில் தப்பினேன்’ – சுப்மன் கில் சூழலுக்கு தகுந்த மாதிரி ஆடியதால் வெற்றி வசப்பட்டது: ஆட்ட நாயகன் துருவ் ஜூரல் மகிழ்ச்சி பேட்டி appeared first on Dinakaran.