உலக யானைகள் தினத்தை முன்னிட்டு தெப்பக்காட்டில் யானைகள் அணி வகுப்பு


கூடலூர்: உலக யானைகள் தினத்தை முன்னிட்டு முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில் யானைகள் அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இங்குள்ள யானைகள் மாயாற்றில் குளிக்க வைக்கப்பட்டு பின்னர் முகாமில் உள்ள புல் தரையில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. யானைகளுடன் வனத்துறையினரும் அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வரிசையாக நின்ற யானைகள் பிளிற அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.  பின்னர், யானைகள் மற்றும் வனத்துறையினர் அடங்கிய குழு புகைப்படம் எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு யானைகளின் முக்கியத்துவம், யானைகள் பாதுகாப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. தொடர்ந்து யானைகளுக்கு வழங்கும் வழக்கமான உணவுகளுடன் தேங்காய், கரும்பு, பழங்கள் உள்ளிட்ட சிறப்பு உணவுகளும் வழங்கப்பட்டன.

கூடலூர் கோட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைத்து வனச்சரகர்கள், வனவர்கள், வனத்துறை ஊழியர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் புலிகள் காப்பக வெளிவட்ட பகுதியான மசினகுடி கோட்டம் மசினகுடியில் துணை இயக்குனர் அருண்குமார் தலைமையில் சிங்காரா, சீகூர் மற்றும் மசினகுடி வனச்சரக அலுவலர்கள் மேற்பார்வையில் அனைத்து சரக வன பணியாளர்கள் மற்றும் அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்ட யானைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி மசினகுடி பஜாரில் இருந்து மசினகுடி வன சோதனைசாவடி வரை நடத்தப்பட்டது.

The post உலக யானைகள் தினத்தை முன்னிட்டு தெப்பக்காட்டில் யானைகள் அணி வகுப்பு appeared first on Dinakaran.

Related Stories: