கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 19வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்களாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் மோதுகின்றன. முதல் இரு ஆட்டங்களில் ராஜஸ்தான், லக்னோவிடம் தோல்வி அடைந்த சன்ரைசர்ஸ், 3வது போட்டியில் பஞ்சாப்பை சாய்ந்தது. இன்று வெற்றியை தொடரும் முனைப்பில் களம் இறங்குகிறது. கடைசி போட்டியில் அரைசதம் அடித்த ராகுல் திரிபாதி பார்முக்கு திரும்பி உள்ளார். அகர்வால், ஹாரி புரூக் ரன் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இவர்களுடன் கேப்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் அதிரடியில் மிரட்ட காத்திருக்கின்றனர். பவுலிங்கில் மயங்க் மார்கண்டே, பஞ்சாப்பை திணறடித்து கவனம் ஈர்த்தார். பவுலிங்கில் புவனேஸ்வர்குமார், மார்கோ ஜான்சன், நடராஜன் ஆகியோர் வலு சேர்க்கின்றனர்.
மறுபுறம் முதல் போட்டியில் பஞ்சாப்பிடம் தோல்வி அடைந்த கேகேஆர் அடுத்த இரு ஆட்டங்களில் பெங்களூரு, குஜராத்தை வீழ்த்தி சூப்பர் பார்மில் உள்ளது. குஜராத்திற்கு எதிராக ரிங்கு சிங் கடைசி ஓவரில் 5 சிக்சர் விளாசி பிரம்மிக்க வைத்தார். ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், கேப்டன் நிதிஷ் ரானா ஆகியோரை தான் பேட்டிங்கில் பெரிதம் நம்பி உள்ளது. ஷர்துல் தாகூர் கவனம் ஈர்த்தாலும் ரஸ்சல் இதுவரை பெரிதாக ஆடவில்லை. பவுலிங்கில் சுனில் நரேன், வருண் சக்ரவர்த்தி எதிரணிக்கு நெருக்கடி அளிப்பர். வேகத்தில் உமேஷ்யாதவுடன், பெர்குசன் களம் இறங்குவார். இருஅணிகளும் வெற்றியை தொடர போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இருஅணிகளும் இதுவரை 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 15ல் கொல்கத்தா, 8ல் சன்ரைசர்ஸ் வென்றுள்ளன.
The post ஈடன் கார்டனில் இன்று இரவு சன்ரைசர்ஸ் – கே.கே.ஆர் மோதல்: வெற்றியை தொடரப்போவது யார்? appeared first on Dinakaran.