தனக்கு 70 வயது ஆகிவிட்டது; மூத்த குடிமகன் என்ற முறையில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி எடப்பாடி பழனிசாமி மனு!!

சென்னை: மூத்த குடிமகன் என்ற முறையில் நேரில் ஆஜராவதிலிருந்து இருந்து விலக்களிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன், அவருடைய நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவில்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் என பேசினார்.

இந்த பேச்சு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி அவர் மீது தயாநிதிமாறன் எம்.பி., சென்னை எழும்பூர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது நேரில் ஆஜரான எடப்பாடி பழனிசாமி, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை செப்.19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், மூத்த குடிமகன் என்ற முறையில் நேரில் ஆஜராவதிலிருந்து இருந்து விலக்களிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து எடப்பாடி பழனிசாமி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தனக்கு 70 வயது ஆகிவிட்டது; மூத்த குடிமகன், அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சராக இருந்தேன்; உடல்நலக் கோளாறு உள்ளதால் வாழ்நாள் முழுவதும் மருந்து உட்கொண்டு வருவதால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கை தாமதப்படுத்தும் நோக்கமோ, அல்லது நீடிக்க வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லை எனவும் எடப்பாடி பழனிசாமி அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

The post தனக்கு 70 வயது ஆகிவிட்டது; மூத்த குடிமகன் என்ற முறையில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி எடப்பாடி பழனிசாமி மனு!! appeared first on Dinakaran.

Related Stories: