அமெரிக்காவில் புழுதி புயல்: 100 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் 6 பேர் பலி; 30 பேர் படுகாயம்

இல்லினாய்ஸ்: அமெரிக்காவில் புழுதி புயல் காரணமாக 100 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியது. இதில் 6 பேர் இறந்தனர். 30 பேர் படுகாயமடைந்தனர். அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ள பார்மர்ஸ்வில்லி நகருக்கு இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள இன்டர்ஸ்டேட் 55 நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது திடீரென பயங்கரமான புழுதி புயல் வீசியது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு இந்த தூசிகள் பறந்து நெடுஞ்சாலையில் பரவியது.

இதனால் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று அடுத்தடுத்து பயங்கரமாக மோதின. சுமார் மூன்றரை கிமீ தூரத்துக்கு லாரி, கார், பஸ் என 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதின. 2 லாரிகளில் தீப்பிடித்தது. இந்த விபத்துகளில் 6 பேர் பலியானார்கள். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்தனர். லாரிகளில் பிடித்த தீயை தீயணைப்பு வீரர்கள் மற்ற வாகனங்களுக்கு பரவாமல் அணைத்தனர்.

படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக இல்லினாய்ஸ் போலீசார் கூறும் போது, ‘60 பயணிகள் மற்றும் 30 வணிக வாகனங்கள் விபத்துக்குள்ளாகியது. சிகாகோ மற்றும் செயின்ட் லூயிஸ் போன்ற நகரங்களை இணைக்கும் முக்கிய பாதையாக உள்ள இந்த நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.

The post அமெரிக்காவில் புழுதி புயல்: 100 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் 6 பேர் பலி; 30 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: