ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து சென்றபோது சிறுவனுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் டிரைவர் கைது

சென்னை: சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆவடியை சேர்ந்த 12 வயது சிறுவன், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த இரு தினங்களுக்கு முன்பு, அந்த சிறுவன் பள்ளிக்கு செல்வதற்காக ஆவடி எச்.வி.எப். சாலையில் பேருந்துக்காக காத்திருந்தான். அப்போது, அங்கு வந்த ஆட்டோ டிரைவர், பள்ளியில் இறக்கி விடுவதாக கூறியுள்ளார். சிறுவன், தன்னிடம் பணம் இல்லை என கூறியபோது, பணம் வேண்டாம் எனக்கூறி, வற்புறுத்தி ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளார்.

ஆனால், பள்ளிக்கு செல்லாமல் எச்.வி.எப். சாலையில் மருத்துவமனை அருகில் உள்ள பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்து சென்று, சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளான். இதுபற்றி அவர்கள், ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தினர்.

அதில், ஆவடி கோவில் பதாகை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஐயப்பன் (25), சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. நேற்றுமுன்தினம் அவரை, போக்சோ வழக்கில் கைது செய்து, திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

The post ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து சென்றபோது சிறுவனுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் டிரைவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: