திமுக, அதிமுக யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு இல்லை: செல்லூர் ராஜூ திட்டவட்டம்

மதுரை: ‘தமிழகத்தில் திமுக, அதிமுக யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளை ஒட்டி, மதுரை நெல்பேட்டை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கோவை ஓட்டல் விவகாரத்தை பொறுத்தவரை, பாஜவினர் தேர்தலுக்கு முன்னதாக தமிழர்கள், தமிழ் என பேசுவர். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு, இது போன்று தமிழர்களை அவமதிப்பர்.

எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதான் பாஜ. தமிழகத்தில் அதிமுக – பாஜ கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை. மதவாத சக்தியாக பாஜ இருப்பதால், அவர்களுடன் கூட்டணி இல்லவே இல்லை. திமுக, அதிமுக என தமிழகத்தில் திராவிட கட்சிகள் தான் ஆட்சிக்கு வர முடியும். தமிழகத்தில் திமுக, அதிமுக யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. நல்லாட்சிக்கு அது சரிப்பட்டு வராது. பல மாநிலங்கள் இதற்கு உதாரணமாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

The post திமுக, அதிமுக யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு இல்லை: செல்லூர் ராஜூ திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: