மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே அரசை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது தவறு . இருப்பினும் சிவசேனா கட்சியை சேர்ந்த 16 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து சபாநாயகர் உரிய காலத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்று சிவசேனா தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பு தற்போது மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 16 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து சபாநாயகர் ஒருமாதத்தில் முடிவு எடுக்க வேண்டும். இல்லை என்றால் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாட தயங்க மாட்டோம் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதில் அளித்து மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில்,‘‘சட்டப் பேரவைத் தலைவர் ராகுல் நர்வேக்கருக்கு அழுத்தம் கொடுப்பது சரியல்ல. ஏனெனில் சட்டத்தின்படி உரிய நேரத்தில் இந்த விஷயத்தில் முடிவு எடுப்பார்’என்றார். இதுபற்றி லண்டனில் உள்ள சபாநாயகர் நர்வேகர் கூறுகையில்,’ ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் கூடுதல் அழுத்தத்தை கொடுக்கக்கூடாது. சபாநாயகர் என்ற முறையில் எந்த அழுத்தங்களுக்கும் நான் அடிபணிய மாட்டேன். எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான பிரச்னையை தீர்ப்பதற்கு எவ்வளவு கால அவகாசம் தேவைப்பட்டாலும் அதில் எந்த சமரசமும் செய்ய மாட்டேன்’ என்று தெரிவித்தார்.
The post 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரம்; மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் குழப்பம் appeared first on Dinakaran.