சென்னையில் பலத்த மழை; புறப்பாடு, வருகையில் 32 விமானங்கள் தாமதம்: பயணிகள் கடும் அவதி

மீனம்பாக்கம்: சென்னையில் பெய்த பலத்த மழை காரணமாக 17 விமானங்கள் தரை இறங்க முடியாமல் தவித்தது. அதனால் விசாகப்பட்டினம், கோவை, டெல்லி விமானங்கள் பெங்களூருக்கும், மதுரை விமானம் திருச்சிக்கும் திருப்பி அனுப்பப்பட்டன. அதைப்போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 15 விமானங்கள் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு பலத்த சூறைக்காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டன.

சென்னையில் தரையிறங்க வேண்டிய விசாகப்பட்டினம், மதுரை, மும்பை, டெல்லி, ஐதராபாத், கோவை, லக்னோ, டாக்கா உள்ளிட்ட 17 விமானங்கள், நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தது. இந்நிலையில் எரிபொருள் குறைவாக இருந்த விமானங்கள், தொடர்ந்து வானில் வட்டமடித்து பறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் விசாகப்பட்டினம், கோவை, டெல்லி ஆகிய விமானங்கள் பெங்களூருக்கும், மதுரை விமானம் திருச்சிக்கும் திருப்பி அனுப்பப்பட்டன. மற்ற விமானங்கள் தரையிறங்க முடியாமல், தொடர்ந்து வானில் வட்டமடித்து பறந்தன.

பின்னர் சூறைக்காற்று, மழை இடி மின்னல் சற்று ஓய்ந்த பின்பு, இந்த விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்னையில் தரையிறங்கின. அதை போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி, கொச்சி, திருவனந்தபுரம், மும்பை, ஐதராபாத், பெங்களூர், சிங்கப்பூர், குவைத், துபாய் உள்ளிட்ட 15 விமானங்கள், ஒரு மணி நேரத்தில் இருந்து, 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு மற்றும் வருகை என 32 விமானங்கள் தாமதமாகி பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

The post சென்னையில் பலத்த மழை; புறப்பாடு, வருகையில் 32 விமானங்கள் தாமதம்: பயணிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Related Stories: