‘’10 ஆண்டில் மத்திய அரசு எதுவும் செய்யவில்லை’’ தமிழகத்தில் பாஜ வளர்ந்துவிட்டதுபோல் மாயதோற்றம் ஏற்படுத்தும் அண்ணாமலை: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு

பெரம்பூர்: கடந்த 10 ஆண்டுகள் மத்திய பாஜ ஆட்சியில் பாலும் தேனும் ஓடவில்லை. தமிழகத்தில் அந்த கட்சி வளர்ந்து விட்டதுபோல் மாநில தலைவர் அண்ணாமலை மாய தோற்றத்தை ஏற்படுத்துகிறார் என்று அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக சாடினார். சென்னை ஓட்டேரி குயவர்ப்பேட்டையில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் கூறியதாவது; அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து சில கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தேர்தல் நெருக்கத்தில் அதுகுறித்து அறிவிக்கப்படும். தமிழகத்தில் பாஜகவுடன் இனி எப்பவும் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்பதை நாங்கள் அறிவித்து விட்டோம். தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிட்டதை போன்ற மாயத்தோற்றத்தை அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஏற்படுத்துகிறார். பாஜக எவ்வளவு தான் மக்களை ஏமாற்றுகின்ற வேலைகளில் ஈடுபட்டாலும் தமிழகத்தை பொறுத்தவரையில் தேசிய கட்சியாக இருக்கிற பிஜேபி வளர்ச்சி அடைந்துவிட்டது என்று கூற முடியாது.

பாஜக ஒரு சுமை என்ற காரணத்தினால் கட்சி தொண்டர்களின் விருப்பப்படி பாஜக அல்லாத பிற கட்சிகளுடன் கூட்டணிவைத்து தேர்தலை சந்திக்க உள்ளோம். சிலர் நாங்கள் பாஜகவை விமர்சிக்கவில்லை என்று கூறுகிறார்கள். தற்போது தேர்தல் வருகிறது. 10 ஆண்டுகள் ஆட்சியில் மத்திய சர்க்கார் தேனும் பாலும் ஓடுகின்ற அளவிற்கு ஆட்சி செய்து விட்டார்களா? நாங்கள் அதனை மக்களிடம் கொண்டு செல்வோம். மத்திய அரசு தமிழ்நாட்டிற்க்கு செய்த துரோகங்களை மக்களிடம் எடுத்து சொல்வோம். இவ்வாறு கூறினார்.

The post ‘’10 ஆண்டில் மத்திய அரசு எதுவும் செய்யவில்லை’’ தமிழகத்தில் பாஜ வளர்ந்துவிட்டதுபோல் மாயதோற்றம் ஏற்படுத்தும் அண்ணாமலை: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: